Tuesday, July 14, 2009

ஒரு பத்திரிக்கை பேட்டியில் ஆண் எப்போது அழகு என்று ராதிகா அளித்த பேட்டியில் தனது தந்தைக்கு எழுத படிக்க தெரியாது ஆனால் படித்தவர்கள்கூட பேசாத பல விசயங்களை அவர் பேசுவார் அதன் ரகசியம், அதற்கென ஒரு ஆளை வேலைக்கு வைத்து தினமும் செய்தித்தாளில் வரும் அனைத்து விசயங்களையும் அறிந்துகொண்டு மற்றவர்களிடம் உரையாடுவார் என்று கூறியிருந்தார். தன்னிடமிருக்கும் குறைகளை குறையே இல்லாதவகையில் மற்றியமைத்துக்கொண்ட இந்த ஆச்சரியமான மனிதரைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன். இந்த புத்தகத்தின் மூலமாக அவரைப்பற்றி முழுமையாக அறிந்துகொள்ள முடிகிறது.

எம்.ஜி.யார், சிவாஜிக்கு எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை M.R.ராதா என்று தெரிந்தாலும், நடைபெற்ற பல நிகழ்வுகளால் அவரை கொண்டாடாமல் விட்டுவிட்டார்கள் இருந்தாலும் அதையும்மீறி இன்றளவும் M.R.ராதாவைப்பற்றி நாம் பேசிக்கொண்டிருக்க முக்கியக்காரணம் அவருடைய ஆளுமைப்பண்புகள் மற்றும் மனிதர்களை அவர் படித்திருந்த விதம். ஏதோ சினிமா நடிகரைப்பற்றி படிக்கிறோம் என்றில்லாமல் இந்த புத்தகத்தில் அவரின் அனுபவத்தின் வாயிலாக நாமும் கற்றுக்கொள்ள வேண்டிய பல விசயங்கள் உண்டு. ஒரு துறையில் புதிதாக நாம் நுழையும்போது யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை கதாநாயகனாக அறிமுகமாகப்போகும் அசோகனுக்கு M.R.ராதா சொல்லும் புத்திமதியிலேயே நாமும் புரிந்துகொள்ளலாம். அசோகன் அவர்களால் கதாநாயகனாக பிரகாசிக்க முடியாமல் போன காரணத்தை ஆரம்பத்திலேயே சொன்ன M.R.ராதாவின் அனுபவம் சிறப்புவாய்ந்தது.

M.R.ராதாவிடம் நாம் கற்றுகொள்ள வேண்டிய இரண்டு விசயங்கள் உள்ளன:

1. நம்முடைய குறைகள் என்னென்ன என்பதை முழுமையாக தெரிந்து கொண்டு அதை நிறைவான விசயங்களாக மற்றிக்கொள்வது. தனக்கு எழுதப்படிக்க தெரியாது இதனால் அன்றாட செய்திகளை அறிந்துகொள்ள முடியாது இதை ஒரு குறையாக கருதாமல் அதற்காக ஒரு நபரை நியமித்து செய்திகளை வாசித்துக்காட்ட சொல்லி செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொண்டு அதை நாடகத்திற்கு பயன்படுத்தியிருக்கிறார். சினிமாவில் தன்னால் என்ன செய்ய முடியும் என்பதையும் தெளிவாக அறிந்துவைத்திருக்கிறார் அதை அவரே ஒரு இடத்தில் இப்படி சொல்கிறார் ‘கனேசன் மாதிரியெல்லாம் எனக்கு வராது அதனால நான் என்ன செய்கிறேனோ அதை படம் எடுத்துக்க’.

2. நம்மைவீட மற்றவர்கள் யாரும் உயர்ந்தவர்கள் கிடையாது என்ற எண்ணம். நாடகம் பார்க்க பெரியார், அண்ணா போன்ற பெரியவர்கள் வந்திருக்காங்க என்று சொல்லும் போது பதட்டபடாமல் வரட்டுமே இப்ப என்ன அதுக்கு ‘என்னைவீட பெரியவங்களா நான் யாரையும் நினைத்துகூட பார்ப்பதில்லை’ என்று சொல்கிறார். சொல்வதோடு இல்லாமல் அதை பல இடங்களில் செய்தும் காட்டியிருக்கிறார். நாமாக இருந்தால் ஆங்கிலம் எனக்கு தெரியாது தமிழில் சொல்லுங்க என்று சொல்லுவோம் அதையே M.R.ராதா இப்படி சொல்கிறார் ‘நீங்க ஆங்கிலத்தில் பேசினா எனக்கு மட்டும்தான் புரியும் மற்றவர்களுக்கு புரியாது அதனால தமிழில் பேசுங்க’ அதுவும் தன்னை கைது செய்ய வந்திருக்கும் போலிஸிடம் பேசுவதையும், சிவாஜி இம்பால கார் கொடுக்க மறுக்கும்போது அதற்கு கோபப்படாமல் M.R.ராதா என்ன செய்தார் என்று படித்தீர்களானால் அவருடைய அளுமை உங்களுக்கு புரியும்.

புத்தகத்தை படிக்கும் போது ஒரு விசயம் நமக்கு புரிகிறது அந்தகாலத்தில் இருந்தவர்கள் ஒரு நேரடியான அனுகுமுறையை கையாண்டிருக்கிறார்கள். என்.எஸ்.கே மீது M.R.ராதா கோபம் கொள்வதும் அதை கேள்விப்பட்டு M.R.ராதா முன்பு வந்து நின்று சுடுடா என என்.எஸ்.கே கூறுவதாகட்டும். அண்ணாபற்றி விமர்சனம் செய்து அதை புத்தகமாக எழுதி அண்ணாவிடமே M.R.ராதா கொடுப்பதாகட்டும். எம்.ஜி.யாரைகூட ஆள்வைத்து சுடவில்லை தானே நேரடியாக சென்று சுட்டிருக்கிறார். பிரச்சனைகள் முடிந்த பிறகு மனோரமாவின் மகன் திருமணத்தில் எம்.ஜி.யாரிடம் சென்று என்ன ராமசந்திரா செளக்கியமா என M.R.ராதா விசாரிப்பதாகட்டும், சரியோ தவறோ அதை நேரடியாகவே செய்திருக்கிறார்கள் என்று படிக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. பல இடங்களில் தனக்கு சரியென பட்ட விசயத்தை சம்பந்தப்பட்டவர்களிடமே சென்று அவர்களை கிண்டல் செய்துள்ளார். உடல் நிலை சரியில்லாத பெரியாரிடம் பணம் கொடுத்து இப்போது உங்களுக்கு உடல் சரியாகிவிடும் என்று கூறுவதையும் ரங்காராவிடம் இவரு நல்லவரா நடிக்கிறவரு லேட்டா வராரு என்று சொல்வதையும் உதாரணமாக கூறலாம்.

M.R.ராதாவின் செயல்பாடுகள் சற்று முரட்டுத்தனமாக நமக்கு தோன்றினாலும் அவரைப்பொருத்தவரையில் அது சாதாரணமாக செயலாகவே இருந்திருக்கிறது. ஏனெனில் அவரது மனநிலை சிறுவயதிலிருந்தே அப்படித்தான் பக்குவப்பட்டிருக்கிறது. பல ஊர்களுக்கு தனியாக பயணம் செய்து, பல மனிதர்களிடம் வேலைபார்த்து அடிபட்டு, மிதிபட்டு மனிதர்களை படித்திருக்கிறார் இதனால் தன்னை தற்காத்துக்கொள்ள வேண்டியிருந்தாலும், கோபம் ஏற்படும்போதும் சம்பந்தப்பட்டவர்களை போட்டுத்தள்ளுவது என்றே சிந்திதிருக்கிறார். எம்.ஜியாருக்கு முன்பே பலபேரிடம் சுட்டுவிடுவேன் என்று கூறுவது, திருப்பதிக்கு குண்டு வைக்க முயற்சிப்பது என அவரது சிந்தனையே அப்படித்தான் இருந்துள்ளது. அதை பிரதிபலிக்கும் விதமாக எல்லாம் முடிந்து இறுதியாக இப்படி சொல்கிறார் ” குடும்பத்தில் சண்டை வருவதில்லையா, நன்பர்களுக்கிடையே சண்டை வருவதில்லையா அதுபோல்தான் இதுவும், இரண்டு நன்பர்கள் அடிச்சிகிட்டோம். கம்பிருந்தால் கம்புல அடிச்சிப்போம், கத்தியிருந்தா கத்தியில அடிச்சிப்போம், துப்பாக்கி இருந்தது துப்பாக்கில அடிச்சிக்கிட்டோம் அவ்வளவுதான்”.

M.R.ராதாவின் பிரச்சனையே அவர் ஒரே மாதிரியான சிந்தனையை கொண்டிருப்பதுதான். சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாத்தி பேசுவது, சக மனிதர்களைக் கண்டால் சஞ்சலமடைந்து சொன்னதை மாற்றி பேசுவது போன்ற விசயங்களெல்லாம் அவரிடம் கிடையாது. எல்லா சூழ்நிலையிலும் தன்னுடைய நிலையான சிந்தனையை வெளிப்படுத்தியிருக்கிறார். முதலில் கடவுள் இல்லைனு சொன்னாங்க, பிறகு அண்ணா ஒரே கடவுள் என்று சொன்னார் பெரியாரும் அதை ஒத்துக்கிட்டார் ஆனா அதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என தன்னுடைய தனித்தன்மையை வெளிப்படுத்துகிறார். சாதாரண தொண்டனாக இருந்தால் தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே என சென்றிறுப்பான்.

ஆசிரியர் எம்.ஜியாருக்கும் M.R.ராதாவிற்கு ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனையிலிருந்து எம்.ஜியாரை சுடும் வரை விறுவிறுப்பாக எழுதியுள்ளார். அந்த சமயத்தில் M.R.ராதாவின் பேச்சுக்கள் எப்படி தவறாக பொருள்கொள்ளப்பட்டது என்பதையும் விளக்கியிருப்பது சிறப்பு.

M.R.ராதாவிடம் நாம் அசந்து போகும் இரண்டு விசயங்கள் உண்டு. 1. உதவி கேட்டதற்காக உடல் நிலை சரியில்லாவிட்டாலும் காலில் ரத்தம் வடிய மேடையேறி நடித்து கொடுத்த பண்பு மற்றும் தன்னுடன் பணியாற்றுபவருகளிடம் அவர்காட்டும் பரிவு. 2.அரசாங்கமே எதிர்த்தாலும் தான் நினைத்ததை செய்து காட்டும் போரட்ட குணம்.

தற்போதுள்ள சினிமா நடிகைகளிடம் ஒரு கேள்வி அவ்வப்போது கேட்கப்படுவண்டு ‘உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?’ பதில் சொல்ல முடியாமல் ஒருவழியாக சமாளித்து அடுத்த கேள்விக்கு சென்று விடுவார்கள். யாராவது ஒரு நடிகரின் பெயரை சொல்லிவிட்டால் தன்னுடைய மார்கெட் பாதிக்கப்படுமோ என்ற எண்ணம். எந்த பிரச்சனையும் இல்லாத இந்த காலகட்டத்திலேயே இப்படி என்றால்… M.R.ராதாவின் இறுதி சடங்கில் சினிமா நடிகர்கள் சிலர் கலந்துகொண்டார்கள் என்று படிக்கும்போது அப்போதைய சூழ்நிலையை புரிந்துகொள்ள முடிகிறது.

ஒரு மிகச்சிறந்த ஆளுமை குணம் நிறைந்த ஒருவரைப்பற்றி படிக்க விரும்புபவர்கள் இந்த புத்தகத்தை நிச்சயம் படிக்க வேண்டும். இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க கீழே உள்ள முகவரிக்கு (URL) செல்லுங்கள்.

URL IS: http://nhm.in/shop/978-81-8368-636-5.html

Friday, July 3, 2009

மாற்றம் இந்த வார்த்தையை ஏற்றுக்கொள்ளாத, அனுமதிக்காத எந்த விசயமும் காலம் கடந்து நிலைத்திருக்காது. அதற்கு சரியான உதாரணம் ராமாயணம் என இந்த புத்தகம் படிக்கும்போது தெரிகிறது. தான் செல்லுமிடமெல்லாம் அந்த இடத்தின் பண்புகளுக்கேற்ப மாற்றும் பெறும் தண்ணீர் போல ராமாயணம் நாடுகளை கடந்து, காலாச்சார மாற்றங்களை ஏற்று கொண்டு, அந்த அந்த நாட்டு மக்களின் பண்புகளுக்கேற்ப புது புது வடிவங்களில் உருவாகி சிறப்புடன் விளங்குகிறது.

ராமகியன் படிக்கும்போது இவ்வளவு வகையான ராமாயணம் இருக்கிறதா என நம்மால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. நமக்கு தெரிந்தது ஒன்று அல்லது இரண்டு ராமாயணம்தான் அதுவும் முழுமையாக தெரியாது. இவ்வளவு வகையான ராமாயணங்களை படித்து, தனித்தனி விசயங்களாக தொகுத்து, விருவிருப்பு குறையாமல் ஒரு புத்தகத்தை உருவாக்கியுள்ளதில் ஆசிரியரின் கடுமையான உழைப்பு தெரிகிறது.

வியாபார உலகத்தில் விற்பனையாளர்களுக்காக ஒரு கதை சொல்லப்படுவதுண்டு ஒரு ஊரில் செருப்பு விற்பனை செய்வதற்கு முன்னோட்டம் பார்பதற்காக ஒரு விற்பனையாளர் ஒரு ஊருக்கு செல்கிறார் அங்கே யாருமே செருப்பை பயன்படுத்துவதில்லை என்பதை காண்கிறார் எனவே இங்கே செருப்பு விற்பனை செய்ய சாத்தியமில்லை என்று திரும்பி வந்துவிடுகிறார். பின்னர் அதே ஊருக்கு இன்னொரு விற்பனையாளர் செல்கிறார் அந்த ஊரில் யாருமே செருப்பை பயன்படுத்தியதில்லை என்பதை அறிந்ததும் உற்சாகம் அடைந்து இங்கே செருப்பு விற்பனைச் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன எனவே உடனே தேவையான செருப்புகளை இங்கே அனுப்புங்கள் என கம்பெனிக்கு தகவல் அனுப்புகிறார். ஒரே இடம், ஒரே நோக்கம் ஆனால் இருவரின் சிந்தனையும் மாறுபட்டுள்ளது ஒருவர் ஆக்கபூர்வமாக சிந்திக்கிறார், மற்றொறுவர் எதிர்மறையாக சிந்திக்கிறார். ராமாயணத்தை பொருத்தவரையிலும் இப்படித்தான் நடந்துள்ளது. இது நம் நாட்டில் நடந்திருக்க கூடாதா என ஏக்கம் கொள்கிறார்கள் தாய்லாந்து மக்கள் ஆனால் இங்கே ராமாயணத்தை குறை கண்டுபிடிக்கவும், குதர்க்கம் பேசவும்தான் பயன்படுத்துகிறோம். நாம் அதை வாழ்வியியல் நோக்கத்தோடு அனுகவில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் தாய்லாந்து மக்கள் ராமாயணத்தை ஒரு பண்பாடாக, கலாச்சாரமாக, வாழ்வியல் முறையாக அனுகியிருக்கிறார்கள் அதனால் தான் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வாழ்வியல் சிந்தனையோடு ராமாயணத்தை அனுகியிருப்பதால் தான் தாய்லாந்து, கம்போடியா, பர்மா, வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இவ்வளவு சிறப்பு பெற்றுள்ளது இதில் இஸ்லாமிய நாடுகளும் அடக்கம் என்பது நமக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அருகில் உள்ளவற்றின் அருமை தெரியாது என்று சொல்லப்படும் வாக்கியம் நிஜம்தான்போல் உள்ளது.

சின்ன சின்ன கிளைக்கதைகளை இணைத்து ராமாயணத்தை மேலும் அழகுபடுத்தியிருக்கிறார்கள். இராவணனின் முந்தைய பிறப்பு மற்றும் ராமரின் மனித அவதார நோக்கத்திற்காக ஒரு சிறு பகுதியை இணைத்திருப்பதும், ராமர் சீதை மீது சந்தேகம்கொள்ள காரணமான ஒரு நிகழ்ச்சியை சேர்த்திருப்பதாலும் ஒரு முழுமையை உணரமுடிகிறது.

நம்மை பொருத்தவரையில் ராமர் என்ன தவறு செய்தாலும் அதை ஞாயப்படுத்தவே முயற்சி செய்வோம். தவறு செய்திருந்தாலும் ஏன் செய்தார் என்று ஞாயப்படுத்தும்விதமாக விளக்கமாக எழுதுவோம் ஆனால் ராமகியனில் ராமரின் சில தவறான மனித பண்புகளையும் அப்படியே பதிவு செய்துள்ளார்கள். சீதையை கொல் என்று சொல்லும் போதும் அவளுடைய இதயமும் மிருகத்தின் இதயம் போலவே உள்ளது என்று சொல்லும் போதும் சாராசரி மனிதனாக நமக்கு தோன்றுகிறார்.

ராவணன் இறந்த பிறகு ராமருக்கும் சீதைக்கும் பிரச்சனை ஏற்படுவதும் அதை போக்க ராமர் எடுக்கும் முயற்சிகளை படிக்கும் போது அப்படியே நம்முடைய தமிழ் சினிமாவில் வரும் கதைகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது. சோகமாக இருப்பதுபோல் சூழ்நிலையை ஏற்படுத்தி, குழந்தைகளை காரணம் காட்டி, உயிர்விடப்போவதாக சொல்லி தன்னுடன் வர சீதையை அழைக்கும் போதும் சினிமாவில் பார்க்கும் அனைத்து விசயங்களும் நடக்கின்றன, சினிமாவில் வருபவர்கள் கெட்டவர்களாக இருந்து பின்னர் திருந்தி நல்லவர்களாகமாறி இதுபோன்று நடந்து கொள்வார்கள் ஆனால் ராமர் மேண்மைமிக்கவராக இருந்து பின்னர் சராசரி மனிதராக நடந்துகொள்கிறார்.

சீதை பற்றி நாம் தெரிந்து வைத்திருக்கும் விசயங்களை வீட அதிகமாக இந்த புத்தகத்தில் தெரிந்துகொள்ள முடிகிறது. சீதை தன்னம்பிக்கைமிக்கவளாக, கணவனை எதிர்த்து தனிமையில் வாழ்ந்து காட்டுபளாக, இறுதிவரை தன்னை ஒதுக்கிய கணவனுடன் சேரக்கூடாது என்ற வைராகியம் கொண்டவளாக விளங்குகிறாள்

நாடு, இனம், மொழி, கலாச்சாரம் மாறினாலும் பெண்களின் நிலையை பொருத்தவரையில் அப்படியேதான் இருக்கும் என்பதை ராமகியனிலும் அறிந்துகொள்ள முடிகிறது. சீதையிலிருந்து சிவன் மனைவி வரை அனைத்து பெண்களையும் தாழ்த்தியே எழுதப்பட்டுள்ளது.

வாலியின் இறப்பு புதுமையாக உள்ளது. வாலி கொல்லப்படவேண்டிய காரணத்தை முன்கூட்டியே உருவாக்கி, இந்தியாவில் உள்ள ராமாயணம்போல் இல்லாமல் ராமர் மீது பழி ஏற்படாதவகையில் ராமரால் வாலி கொல்லப்படும் நிகழ்ச்சியை மிக அருமையாக அமைத்துள்ளார்கள்.

ராமகியனில் நம்மை அதிர்ச்சியடைய, ஆச்சரியமைடய வைக்கும் இரண்டு நபர்கள் உண்டு ஒருவர் அனுமன் மற்றொறுவர் ராவணன். ஒழுக்கசீலராக, பிரம்மச்சாரியாக நாம் அறிந்திருந்த அனுமன் இல்லை இவர். கிட்டத்தட்ட கேம்ஸ்பாண்ட்போல அனுமனை வடிவமைத்துள்ளார்கள் செயல்திறன்மிக்கவர் அதே சமயத்தில் காமலீலையில் ஈடுபடுபவர். செல்லுமிடங்களிளெல்லம் பெண்களுடன் உல்லாசமாக இருக்கிறார். உச்சகட்டமாக ராவணனின் முன்பே மண்டோதரியை கற்பழிக்கிறார். அதே சமயத்தில் திட்டங்கள் தீட்டி வெற்றியடையவக்கும் செயல் வீரராகவும், நகைச்சுவை உணர்வு மிக்கவராகவும் திகழ்ந்துள்ளார்.

இன்னொருவர் ராவணன் மற்றவர்களிடம் ஒப்பிடும்போது மிகுந்த ஒழுக்கமுடையவர்போலவே திகழ்கிறார். அனுமனிலிருந்து அணைவருமே பெண்கள் விசயத்தில் ராவணனைவீட ஒருபடி தாழ்ந்தவர்களாகவே உள்ளார்கள். ராவணன் மற்றவர்கள்மீது கோபம் கொள்ள காரணமான முன்கதை சுருக்கமும், சீதைமீது கொண்டிருக்கும் காதலும் ராவணனின் செயலை ஞாயப்படுத்துகிறது. ராவணன் தன்னுடைய இறுதி நாளில் தன்னுடைய முடிவை அறிந்துகொண்டு போருக்கு புறப்பட்டு செல்லும் போது ஏற்படும் நிகழ்வுகள் மற்றும் அந்த நேரத்திலும் சீதையின் முகத்தை நினைத்துப்பார்த்து சிலாகித்து சீதை எப்போதும் என்னுடன் இருந்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்பது போன்ற விசயங்களை படிக்கும் போது ஒரு சோகமான கவிதைபோல அழகாக உள்ளது.

லாவோஸ், கம்போடிய, சீனா, ஜப்பான், இந்தோனேசியா, பர்மா போன்ற நாடுகளில் ராமயணத்தை அவர்களின் நாட்டிற்கேற்ப மாற்றம் செய்து அவர்களின் வரலாற்றை விளக்க ராமாயணத்தை பயன்படுத்தியுள்ளது நமக்கு ஆச்சரியமான செய்திதான். அதிலும் பர்மிய ராமாயணத்தில் ராவணனும் சுயவரத்தில் பங்கு கொண்டு சிவதனுசுவை எடுப்பது மிகவும் சுவாரசியமான விசயம்.

ராமாயணம் பற்றி அறிந்து கொள்ள விருபுபவர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம் இது. புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு விசயங்களை படிக்கும்போதும் அப்படியா! என்ற எண்ணம் மனதில் தோன்றுகிறது அதுவே இந்த புத்தகம் சிறந்த புத்தகம் என்பதற்கு உதாரணம். இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க கீழே உள்ள முகவரிக்கு (URL) செல்லுங்கள்.

URL IS: http://nhm.in/shop/978-81-8493-046-7.html