Tuesday, November 17, 2009

சில கதாநாயகர்களின் திரைப்படங்களை பார்க்கும் போது, பிரம்மாண்டமான சண்டை காட்சிகளுடன் படம் துவங்கும், பரவாயில்லையே என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் சண்டைக்காட்சி முடிந்தது அந்த கதாநாயகன் தூங்கிக்கொண்டிருப்பார் அவர் கணவில் நடந்த சண்டைக்காட்சியாக சித்தரிக்கப்பட்டு இருக்கும். படத்திற்கும் அந்த சண்டைக்காட்சிக்கும் சம்பந்தம் இருக்காது. ஒரு பரபரப்பை உண்டுபன்னுவதற்காக அந்த காட்சியை சேர்த்திருப்பார்கள். சினிமா நடிகர் சம்பந்தப்பட்ட புத்தகம் என்பதாலோ என்னவோ இந்த புத்தகம் எழுதியதிலும் அந்த முறை கடைபிடிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு அத்தியாயத்தையே சினிமா மாதிரியான மிகைப்படுத்தலுக்காக ஆசிரியர் பயன்படுத்தியிருக்கிறார்.

விஜயகாந்தின் புத்தகம் வீட்டிற்கு வந்ததும், வீட்டில் உள்ளவர்கள் கேட்ட கேள்வி “விஜயகாந்திற்கு புத்தகமா, புத்தகம் போடும் அளவுக்கு விஜயகாந்த் வந்துவிட்டாரா???” புத்தக விசயத்தில் மட்டுமல்ல அரசியலிலும் விஜயகாந்தைப்பற்றி பல ஆச்சரியமான கேள்விகள் எழுவதுண்டு. அவர்கள் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நிதர்சனமான உண்மை விஜயகாந்தின் வளர்ச்சி.

விஜயகாந்தின் முந்தைய வாழ்க்கை முறைகளை பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இந்த புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் அவருடைய தற்போதைய விபரங்களை அறிந்துகொள்ள விரும்புபவர்கள் இந்த புத்தகத்தை படிக்கும் போது அதிகமான விசயங்கள் அவர்கள் அறிந்ததாகவே இருக்கும். ஏனெனில் அவையாகும் சமீபகாலத்தில் நடந்தவைகள்.

சிறு வயதில் யாரிடமும் அதிகம் பேசாமல் இருந்த விஜயகாந்த் பக்கம் பக்கமாக வசனம் பேச முடிகிறதென்றால், அதற்கான சூழ்நிலையும், பேச வேண்டிய அவசியமுள்ள தொழில் அவருக்கு அமைந்ததும் காரணமாக சொல்ல முடியும். இதை படிக்கும் போது வளர்ச்சியை விரும்பும் மக்கள் தங்களிடம் உள்ள குறைகளை நிறைகளாக மாற்றிக்கொள்ள அதற்கு ஏற்ற சூழ்நிலையில் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆங்கிலம் பேச விரும்புபவர்கள், ஆங்கலம் பேசும் மக்களிடம் பழக வேண்டும் என்பார்கள். ஆங்கிலம் பேச வாய்ப்பு இல்லாத நிலையில் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஆங்கிலம் பேசுவது சிரமமாகத்தான் இருக்கும் என்பார்கள். இந்த கூற்று உண்மைதான் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

புத்தகத்தை படித்துக்கொண்டு வரும்போது சில இடங்களில் நம்மை ஆச்சரியப்படுத்தும் விசயங்கள் உண்டு. அதில் முக்கியமானவை விஜயகாந்தின் ஆரம்ப கால காதல். ஜன்னலோரம் எட்டிப்பார்ப்பது, கண்களால் பேசிக்கொள்வது, காதலின் கட்டளைக்கு ஏற்ப மாற்றமடைவது என சினிமாவில் நடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பல படங்களை ஓட்டியிருக்கிறார் விஜயகாந்த். அந்த படமும் தோல்வியில் முடிந்திருக்கிறது. அதற்குப்பிறகும் இரண்டு காதல் படங்களை வெளியிட்டு இருக்கிறார் ஆனால் அவற்றின் விபரங்கள் இல்லையாம். நம்மை அறியாமலேயே நாம் சிரிக்கும் பக்கங்கள் இவை.

நம்ம ஊருக்கு தொடர்பில்லாத நபர்களின் வாழ்க்கை முறை பற்றி படிக்கும் போது, அவர்களின் சிறு வயது வாழ்க்கை முறை நமக்கு தொடர்பில்லாததாக இருக்கும். மற்றொருவரின் வாழ்க்கையை படிக்கிறோம் என்ற உணர்வுதான் இருக்கும். ஆனால் விஜயகாந்த் நம்மைப்போன்ற சராசரி மனிதர் என்பதால் அவருடைய சிறு வயது வாழ்க்கையை படிக்கும்போது அட! இவரும் நம்மைப்போன்ற ஆள்தானா! என்ற ஆச்சரிய்ம் ஏற்படுகிறது. கில்லி விளையாடுவது, பள்ளிக்கூடம் செல்லாமல் கோலி விளையாடுவது, காத்தாடி விடுவது, பல்பம் மிட்டாயை சிகரெட் பிடிப்பது போல வாயில் வைத்துக்கொண்டு விளையாடுவது என அத்தனையும் சராசரி வாசகர்களின் சிறுவயதில் நிகழ்திருப்பதால் இவற்றை படிக்கும் போது அவர்களின் முகத்தில் மெல்லிய புன்னைகை பூப்பது நிச்சயம்.

சினிமாவில் கூட நடக்காத ஒரு அதிசயம் விஜயகாந்த் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளது. அது அவருக்கு கிடைத்த இரண்டாவது அம்மாவும் அன்பானவராக அமைந்தது. இரண்டாவதாக வந்த அம்மாவின் குணம் சற்று எதிர்மறையானதாக அமைந்திருந்தால் விஜயகாந்தின் வாழ்க்கையில் திரைக்கதை வேறு விதமாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதிர்ஷ்ட வசமாக அவரும் பெற்ற தாயைப்போல அன்பு செலுத்தியிருக்கிறார். விஜயகாந்தின் வளர்ச்சிக்கு இது கூட ஒரு முக்கியமாக காரணம் என்று சொல்லலாம்.

நம்மை ஆச்சரியப்படுத்தும் மற்றொரு விசயம் விஜயகாந்த், இப்ராஹிம் ராவுத்தர் நட்பு, கொஞ்ச நாளைக்கு முன்பு ஒரு பேட்டியில் இதோ இவன் என் நன்பன் எங்களுக்குள் எந்தவித மதரீதியான பாகுபாடும் கிடையாது என சொல்லியிருந்தார். சரி சினிமா ரீதியான நட்பு என நினைத்திருந்தேன் ஆனால் படிக்கிற காலத்தில் இருந்து, சினிமா துறைக்கு வந்து கஷ்டப்படும்போது ஒன்றாக கஷ்டப்பட்டு, இன்று வரை நன்பர்களாக இருக்கிறார்கள் என்பது உண்மையிலேயே பெரிய விசயம்தான்.

ஒரு சினிமா நடிகன் அரசியலுக்கு வந்துவிட்டார் என்ற விமர்சனத்தின் மூலம் விஜயகாந்தின் அரசியில் வாழ்க்கை நேற்று ஆரம்பித்தது போன்ற ஒரு பிம்பம் உள்ளது. ஆனால் அவரது சிறுவயதிலிருந்தே அவருக்கு அரசியில் தொடர்பு இருந்திருக்கிறது. அவருடைய அப்பா மூலமாக, அரசியல் சிந்தனைகளும், மக்கள் தொடர்பு சிந்தனைகளும் அவருக்கு ஆரம்பத்திலிருந்தே இருக்கிறது என்பது தெரிகிறது.

விஜயகாந்திடம் பிடித்தமான விசயம் அவருடைய துணிவு மற்றும் தீர்க்கமான முடிவுகள். நான் வருவேன், வரமாட்டேன், வெளியில் இருப்பே, ஓரமா இருப்பேன் இந்த மாதிரி பேச்சு எங்கிட்ட கிடையாது ”நான் கண்டிப்பாக வருவேன்” என்று ஒரு படத்தில் தான் அரசியலுக்கு வருவது பற்றி வசனம் பேசுவார், அப்படித்தான் அவருடைய செயல்பாடுகள் இதுவரை இருந்துள்ளன. ஒவ்வொரு முறை அவருக்கு கிடைக்கும் வாக்கு எண்ணிக்கைகள் அதிகரிக்கும்போது மற்ற கட்சிகளால் இதனால் தான் அவருக்கு வாக்கு எண்ணிக்கை அதிகரித்தது, அதனால்தான் வாக்கு எண்ணிக்கை அதிகரித்தது என ஒவ்வொரு காரணம் கூறப்படுகிறது. அவர் வளர்ச்சிப்பாதையில் இருக்கிறார் என்ற நிதர்சனமான உண்மையை யாராலும் ஜீரணித்துக்கொள்ள முடிவதில்லை..

விஜயகாந்தை பற்றிய இந்த புத்தகம் கூட விஜயகாந்த் படம் பார்ப்பதுபோல்தான் இருக்கிறது. சண்டைக்காட்சிகள், சில காதல் காட்சிகள், ஆவேசமான போரட்டங்கள், அரசியல் கலம் என ஒரு விஜயகாந்த் படத்தை நம் கண்முன் நிருத்துகிறார். புத்தக்த்தில் அவ்வப்போது வரும் சண்டைக்காட்சிகளை ஆசிரியர். சினிமாவில் வரும் சண்டை போலவே விவரித்துள்ளார். இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க இந்த (URL) முகவரிக்கு செல்லுங்கள்: http://nhm.in/shop/978-81-8493-118-1.html