Friday, January 27, 2012

உள்ளத்தில் குழந்தை

உலக இலக்கியங்களை காணும் போதெல்லாம் நமக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை என்று விலகிவிடுவது என் வழக்கம். ஆர்வமிகுதியால் அவ்வப்போது சில புத்தகங்களை படிக்க ஆரம்பித்து பின்னர் கைவிட்டது பல முறை நிகழ்ந்திருக்கிறது. ஆனாலும் அப்படி அவற்றில் என்னதான் இருக்கிறது அது ஏன் நமக்கு மட்டும் புரியாமல் இருக்கிறது ஒரு முறையாவது ஒரு புத்தகத்தை முழுமையாக படித்துவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மனதில் இருந்துகொண்டே இருந்தது.

”உள்ளத்தில் குழந்தை” இந்த புத்தகத்தை படித்துவிடலாம் என்று துணிவு ஏற்பட முக்கிய காரணம் புத்தகத்தின் அளவு. மிகவும் சிறிய நூல்தான். சரி இந்த முறை ஒரு உலக இலக்கியத்தை படித்துவிட வேண்டியதுதான் என்று ஆரம்பித்ததும் முதல் பத்து பக்கங்கள் வரை புரியாத பெயர்கள், புரியாத சூழல்கள் என ஒன்றுமே புரியவில்லை... விடாபிடியாக தொடர்ந்து படிக்க படிக்க ஏன் இந்த புத்தகத்தை மொழி பெயர்த்திருக்கிறார்கள் என்ற காரணம் புரிந்தது. மிகவும் எளிமையான, அழகான கதை. கொஞ்சம் ஆர்வம் மட்டும் இருந்தால் போது உங்களை தன் போக்கில் இழுத்துச்சென்றுவிடக்கூடிய அற்புதமான வர்ணனைகளுடன் கதை நகர்கிறது.

வெளிநாடு செல்லும் ஒருவன் அங்கு சந்திக்கும் ஒரு அண்ணன் மற்றும் அவருடைய தங்கை என மூன்று பேர்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு இயங்கும் கதை. மூன்று பேரின் உணர்வுகளை மட்டுமே கதையின் போக்காக செல்கிறது. இத்தனைக்கும் இது ஒரு காதல் கதை கூட இல்லை. காதலிக்கலாமா வேண்டாமா என அந்த கதாபாத்திரம் முடிவு எடுப்பதே கதையின் இறுதியாக இருக்கிறதே தவிர, காதலை பக்கம் பக்கமாக விளக்கும் கதை இல்லை இது. காதலும் இல்லை, நட்பும் இல்லை, விரோதமும் இல்லை, ஏதோ ஒன்றை தேடிச்செல்லும் நடவடிக்கைகளும் இல்லை பின்னே நாவலி என்னதான் இருக்கிறது! உணர்வுகள் அதை நீங்கள் இந்த புத்தகத்தை படிக்கும் போது உணர்ந்துகொள்வீர்கள்.



புத்தகத்தின் பெயர் : உள்ளத்தில் குழந்தை

ஆசிரியர் : இவான் துர்கேனிவ்

தமிழாக்கம் : தஸ்லிமா

வெளியீடு : சாஹித் @ ஹாமித் பப்லிஷர்ஸ்

No comments: