Monday, December 7, 2009

சில புத்தகங்களை படிக்கும்போது லிப்டில் ஏறியது போன்ற அனுபவம் கிடைக்கும். அதாவது முதல் பக்கத்தை படித்ததும் நம்மை கடைசி பக்கத்திற்கு நம்மை அறியாமலேயே அழைத்துச் சென்றுவிடும். சில புத்தகங்கள் படிக்கட்டில் ஏறுவது போன்ற அனுபவத்தை தரும். அதாவது ஒவ்வொரு பக்கமாக கஷ்டப்பட்டு நாமாக நகர்த்திச் செல்ல வேண்டியிருக்கும். அதிகமாக மொழி பெயர்ப்பு புத்தகங்களை படிக்கும்போதுதான் படி ஏறுவது போன்ற அனுபவம் கிடைக்கும்.

சில வருடங்களுக்கு முன்பு என் வீட்டருகே கம்யூனிச கொள்கைகள், கம்யூனிச புரட்சியாளர்கள் குறிப்பாக லெனின் பற்றிய புத்தகங்களை மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்தார்கள். புத்தகங்களை வாங்குவதற்கு யாரும் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. புத்தக்கத்தின் அளவைப்பார்த்து, இவ்வளவு குறைந்த விலையில் கிடைக்கிறது ஏன் யாரும் ஆர்வம் காட்டவில்லை என யோசித்துக்கொண்டே இரண்டு புத்தகங்களை வாங்கினேன். அதை படிக்க ஆரம்பித்த பிறகுதான் ஏன் மற்றவர்கள் வாங்கவில்லை என்பது புரிந்தது. தமிழ் மொழியில் பேச, படிக்க, எழுத தெரிந்திருந்தாலும் அந்த புத்தகத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை கடைசிவரை புரிந்துகொள்ளவே முடியவில்லை. அதற்கு காரணம் அந்த புத்தகம் மொழி பெயர்க்கப்பட்டுள்ள விதம் அப்படி அமைந்திருக்கிறது. தமிழ் வார்த்தைகள்தான் அனால் அதற்கு பொருள் புரிந்து கொள்வதற்குள் அந்த புத்தகம் படிப்பதற்கான ஆர்வம் குறைந்துவிடுகிறது. எனவே ஒரு மொழி பெயர்ப்பு புத்தகத்தின் மீது ஆர்வம் அதிகரிப்பதும், அந்த புத்தகத்தை அலட்சியப்படுத்தப்படுவதும் மொழி பெயர்ப்பாளர்களின் கையில்தான் இருக்கிறது. முடிந்தவரை மொழிபெயர்ப்பு புத்தகத்தை படித்துக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு ஏற்படாதவாறு மொழிபெயர்ப்பது சிறப்பானதாக இருக்கும்.

கொஞ்ச நாட்களுக்கு முன் பத்ரி அவர்கள் எழுதிய கேண்டீட் புத்தகமும், உமர் என்ற புத்தகமும் படிக்க ஒரு சந்தர்ப்பம் அமைந்தது. அந்த புத்தகத்தில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களை படிக்கும்போதுதான் மொழி பெயர்ப்பு புத்தகத்தை படித்துக்கொண்டிருக்கிறோம் என்ற சிந்தனை வரும் மற்றபடி கதையை பொருத்தவரையில் நேரடியான தமிழ் புத்தகத்தை படிப்பது போல ஒரே சீராக நீரோடை போல செல்லும். சரியாக முடிவெடுக்க என்ற இந்த புத்தகத்தின் முதல் பக்கத்தை படிக்கும்போதே, நாம் ஒரு மொழிபெயர்ப்பு புத்தகத்தை படித்துக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு ஏற்பட்டுவிடுகிறது. புத்தகத்தில் வரும் பெயர்கள், உதாரணங்கள், சூழ்நிலை என அனைத்திலும் நமக்கு புரிபடாத விஷயங்களாகவும், பெயர்களாகவும் உள்ளன.

எடுத்த உடனே என்ன பிரச்சனை அதற்கு என்ன தீர்வு என்று ஆரம்பிக்காமல் மெல்ல மெல்ல ஒவ்வொரு நிலையாக எழுதியுள்ளார்கள். பகுதி 1-ல் முடிவு எடுக்க தேவையான உடல் நிலை மற்றும் மன நிலை குறித்து ஆசிரியர் எழுதியிருப்பது நமக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த பகுதியில் உள்ள விசயங்கள் நம் நடைமுறை வாழ்வில் நாம் அறிந்ததுதான். ஆனாலும் நாம் பின்பற்றுவதில்லை அதை பின்பற்றுவதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், பின்பற்றாததனால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகள் பற்றியும் அறிந்துகொள்ள இந்த பகுதி பயன்படும். தையல் மிஷின் கண்டுபிடித்தவரைப் பற்றி கூறியுள்ள விஷயம் மிகவும் உண்மையானது. ஒரு பிரச்சனையை தீவிரமாக யோசித்திவிட்டு தீர்வு கிடைக்காமல் சோர்ந்துபோய் தூங்கும்போது, விளையாடும்போது, அதாவது நம் மனம் தளர்வான நிலையில் இருக்கும் போது திடீரென நம் மனதில் குறிப்பிட்ட அந்த பிரச்சனைக்குறிய தீர்வு தோண்றும். இது அனைவருக்கும் நடக்கக்கூடிய ஒன்றுதான். ஆசிரியரின் இது போன்ற விசயங்கள் முதல் பாகத்தில் எழுதியிருப்பதால் அடுத்த அத்தியாயங்களில் எந்த மாதிரி விசயங்கள் இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் உண்டாகிறது.

இந்த புத்தகத்தை பொருத்தவரையில் முடிவெடுக்க தேவையான சூத்திரங்கள் என்று எதுவுமில்லை. முடிவெடுக்க தேவையான பண்புகளை என்னென்ன அதை எப்படி நாம் வளர்த்திக்கொள்வது என்பது தொடர்பான விசயங்கள் அதிகம் உள்ளன. அந்த பண்புகளை கண்டரிந்து வளர்த்திக்கொள்வது நமக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். ஆனாலும் சில விசயங்கள் நடைமுறைக்கு சாத்தியமில்லாத விசயங்களாகவே உள்ளன. உதாரணமாக சொல்ல வேண்டுமானால் புத்தகத்தில் வரும் “குறைவாக தவறு செய்பவர்கள் குறைவாகவே கற்றுக்கொள்கிறார்கள்” இதை நாம் செயல்படுத்த விரும்பினாலும் நாம் சார்ந்துள்ள சமூகம் அதற்கு இடம் தராது என்றே நினைக்கிறேன். ஒரு முறை தவறு செய்தாலே இனி இவனை நம்பி எதுவும் கொடுக்க இயலாது என முடிவெடுத்துவிடுகிறார்கள். கற்றுக்கொள்வோம் என்ற முடிவில் அதிகம் தவறு செய்தால் சுத்தமாக நாம் மதிப்பிழந்து போய் விடுவோம். ஆனால் அந்த வாசகம் உண்மைதான் அதை செயல்படுத்துவதுதான் சிரமம். மற்றவர்கள் சாராத நம்முடைய சொந்த விசயங்களில் வேண்டுமானால் அதிக தவறுகளை செய்து அதிகமாக கற்றுக்கொள்ளலாம். அப்படியானால் நாம் தவறுகளில் இருந்து எப்படித்தான் கற்றுக்கொள்வது. அதற்கும் இந்த புத்தகத்திலேயே ஒரு வழிமுறை சொல்லப்பட்டுள்ளது.

நம்முடைய தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள முயற்சித்தால் மேற்கண்ட பிரச்சனை வரும் அதை தவிர்க்க அடுத்தவர்களின் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள மற்றொரு வழிமுறையை சொல்லிக்கொடுக்கிறது இந்த புத்தகம் இது மிகவும் சுலபமான ஒரு முறைதான். மற்றவர்களின் அனுகுமுறைகளை கூர்ந்து கவணித்து அதில் நாம் கற்றுக்கொள்ள முயற்சித்தால் அந்த அனுபவங்கள் நிச்சயமாக நமக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

புத்தகத்தில் வரும் சில உதாரணங்கள் அப்படியே நம் வாழ்வில் நிகழ்ந்ததை விவரிப்பது போல உள்ளது. கொரில்லாவை பார்ப்பதைத்தவர விடாதிர்கள் என எழுதப்பட்டுள்ள பகுதியை இதற்கு உதாரணமாக சொல்லலாம். நாம் ஏதாவது ஒன்றில் தீவிரமாக இருக்கும் போது மற்ற விசயங்களை கவணிப்பதில்லை. தீவிரமான யோசனையில் வண்டியில் செல்லும் போது எதிரில் வரும் தெரிந்தவர்களைக்கூட பார்க்காமல் சென்றுவிடுவோம். அதேபோல இல்லாத உருவங்களை பார்த்தல் தொடர்பான கட்டுரையும் அப்படியே நம் முட்டாள்தனத்தை பிரதிபளிப்பதாகவே உள்ளது. இப்படி இருக்குமோ அப்படி இருக்குமே என நாமாகவே முடிவெடுத்துக்கொண்டு பிரச்சனையை வளர்த்துக்கொண்டே செல்கிறோமே தவிர, உண்மை நிலவரம் என்ன என்பதை நாம் இறுதியாகத்தான் தெரிந்துகொள்கிறோம். இது போன்ற நம்முடைய சிறு சிறு அனுபவங்களை இந்த புத்தகத்தில் பல இடங்களில் உள்ளன.

புத்தகத்தில் உள்ள ஹெல்மெட் குறித்த சிந்தனை யாரும் யோசிக்காதது. இப்படியும் யோசிப்பார்களா என ஆச்சரியப்படவைத்தது. அரசியல் தலைவர்களில் இருந்து அடித்தட்டு மக்கள்வரை சரியாக முடிவெடுக்காததால் வாழ்க்கையையும், புகழையும் இழந்தவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். எல்லா விதமாக விசயங்களையும் சரியாக செய்துவிட்டு அதன் பலனை அடையவேண்டிய இறுதியில் முடிவெடுக்கும் திறனில் பெரும்பாலோனோர் அடிவாங்கியிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த புத்தகத்தில் கூறியுள்ளபடி முடிவெடுக்க தேவையான உடல் நிலை, மன நிலை, ஆளுமைப் பண்புகளை வளர்த்திக்கொண்டால், தீர்க்கமாக முடிவெடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்த புத்தகத்தை வாங்க நீங்கள் முடிவெடுத்துவிட்டால் நீங்கள் செல்ல வேண்டிய இலக்கு : URL http://nhm.in/shop/978-81-317-2963-2.html

Tuesday, November 17, 2009

சில கதாநாயகர்களின் திரைப்படங்களை பார்க்கும் போது, பிரம்மாண்டமான சண்டை காட்சிகளுடன் படம் துவங்கும், பரவாயில்லையே என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் சண்டைக்காட்சி முடிந்தது அந்த கதாநாயகன் தூங்கிக்கொண்டிருப்பார் அவர் கணவில் நடந்த சண்டைக்காட்சியாக சித்தரிக்கப்பட்டு இருக்கும். படத்திற்கும் அந்த சண்டைக்காட்சிக்கும் சம்பந்தம் இருக்காது. ஒரு பரபரப்பை உண்டுபன்னுவதற்காக அந்த காட்சியை சேர்த்திருப்பார்கள். சினிமா நடிகர் சம்பந்தப்பட்ட புத்தகம் என்பதாலோ என்னவோ இந்த புத்தகம் எழுதியதிலும் அந்த முறை கடைபிடிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு அத்தியாயத்தையே சினிமா மாதிரியான மிகைப்படுத்தலுக்காக ஆசிரியர் பயன்படுத்தியிருக்கிறார்.

விஜயகாந்தின் புத்தகம் வீட்டிற்கு வந்ததும், வீட்டில் உள்ளவர்கள் கேட்ட கேள்வி “விஜயகாந்திற்கு புத்தகமா, புத்தகம் போடும் அளவுக்கு விஜயகாந்த் வந்துவிட்டாரா???” புத்தக விசயத்தில் மட்டுமல்ல அரசியலிலும் விஜயகாந்தைப்பற்றி பல ஆச்சரியமான கேள்விகள் எழுவதுண்டு. அவர்கள் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நிதர்சனமான உண்மை விஜயகாந்தின் வளர்ச்சி.

விஜயகாந்தின் முந்தைய வாழ்க்கை முறைகளை பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இந்த புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் அவருடைய தற்போதைய விபரங்களை அறிந்துகொள்ள விரும்புபவர்கள் இந்த புத்தகத்தை படிக்கும் போது அதிகமான விசயங்கள் அவர்கள் அறிந்ததாகவே இருக்கும். ஏனெனில் அவையாகும் சமீபகாலத்தில் நடந்தவைகள்.

சிறு வயதில் யாரிடமும் அதிகம் பேசாமல் இருந்த விஜயகாந்த் பக்கம் பக்கமாக வசனம் பேச முடிகிறதென்றால், அதற்கான சூழ்நிலையும், பேச வேண்டிய அவசியமுள்ள தொழில் அவருக்கு அமைந்ததும் காரணமாக சொல்ல முடியும். இதை படிக்கும் போது வளர்ச்சியை விரும்பும் மக்கள் தங்களிடம் உள்ள குறைகளை நிறைகளாக மாற்றிக்கொள்ள அதற்கு ஏற்ற சூழ்நிலையில் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆங்கிலம் பேச விரும்புபவர்கள், ஆங்கலம் பேசும் மக்களிடம் பழக வேண்டும் என்பார்கள். ஆங்கிலம் பேச வாய்ப்பு இல்லாத நிலையில் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஆங்கிலம் பேசுவது சிரமமாகத்தான் இருக்கும் என்பார்கள். இந்த கூற்று உண்மைதான் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

புத்தகத்தை படித்துக்கொண்டு வரும்போது சில இடங்களில் நம்மை ஆச்சரியப்படுத்தும் விசயங்கள் உண்டு. அதில் முக்கியமானவை விஜயகாந்தின் ஆரம்ப கால காதல். ஜன்னலோரம் எட்டிப்பார்ப்பது, கண்களால் பேசிக்கொள்வது, காதலின் கட்டளைக்கு ஏற்ப மாற்றமடைவது என சினிமாவில் நடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பல படங்களை ஓட்டியிருக்கிறார் விஜயகாந்த். அந்த படமும் தோல்வியில் முடிந்திருக்கிறது. அதற்குப்பிறகும் இரண்டு காதல் படங்களை வெளியிட்டு இருக்கிறார் ஆனால் அவற்றின் விபரங்கள் இல்லையாம். நம்மை அறியாமலேயே நாம் சிரிக்கும் பக்கங்கள் இவை.

நம்ம ஊருக்கு தொடர்பில்லாத நபர்களின் வாழ்க்கை முறை பற்றி படிக்கும் போது, அவர்களின் சிறு வயது வாழ்க்கை முறை நமக்கு தொடர்பில்லாததாக இருக்கும். மற்றொருவரின் வாழ்க்கையை படிக்கிறோம் என்ற உணர்வுதான் இருக்கும். ஆனால் விஜயகாந்த் நம்மைப்போன்ற சராசரி மனிதர் என்பதால் அவருடைய சிறு வயது வாழ்க்கையை படிக்கும்போது அட! இவரும் நம்மைப்போன்ற ஆள்தானா! என்ற ஆச்சரிய்ம் ஏற்படுகிறது. கில்லி விளையாடுவது, பள்ளிக்கூடம் செல்லாமல் கோலி விளையாடுவது, காத்தாடி விடுவது, பல்பம் மிட்டாயை சிகரெட் பிடிப்பது போல வாயில் வைத்துக்கொண்டு விளையாடுவது என அத்தனையும் சராசரி வாசகர்களின் சிறுவயதில் நிகழ்திருப்பதால் இவற்றை படிக்கும் போது அவர்களின் முகத்தில் மெல்லிய புன்னைகை பூப்பது நிச்சயம்.

சினிமாவில் கூட நடக்காத ஒரு அதிசயம் விஜயகாந்த் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளது. அது அவருக்கு கிடைத்த இரண்டாவது அம்மாவும் அன்பானவராக அமைந்தது. இரண்டாவதாக வந்த அம்மாவின் குணம் சற்று எதிர்மறையானதாக அமைந்திருந்தால் விஜயகாந்தின் வாழ்க்கையில் திரைக்கதை வேறு விதமாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதிர்ஷ்ட வசமாக அவரும் பெற்ற தாயைப்போல அன்பு செலுத்தியிருக்கிறார். விஜயகாந்தின் வளர்ச்சிக்கு இது கூட ஒரு முக்கியமாக காரணம் என்று சொல்லலாம்.

நம்மை ஆச்சரியப்படுத்தும் மற்றொரு விசயம் விஜயகாந்த், இப்ராஹிம் ராவுத்தர் நட்பு, கொஞ்ச நாளைக்கு முன்பு ஒரு பேட்டியில் இதோ இவன் என் நன்பன் எங்களுக்குள் எந்தவித மதரீதியான பாகுபாடும் கிடையாது என சொல்லியிருந்தார். சரி சினிமா ரீதியான நட்பு என நினைத்திருந்தேன் ஆனால் படிக்கிற காலத்தில் இருந்து, சினிமா துறைக்கு வந்து கஷ்டப்படும்போது ஒன்றாக கஷ்டப்பட்டு, இன்று வரை நன்பர்களாக இருக்கிறார்கள் என்பது உண்மையிலேயே பெரிய விசயம்தான்.

ஒரு சினிமா நடிகன் அரசியலுக்கு வந்துவிட்டார் என்ற விமர்சனத்தின் மூலம் விஜயகாந்தின் அரசியில் வாழ்க்கை நேற்று ஆரம்பித்தது போன்ற ஒரு பிம்பம் உள்ளது. ஆனால் அவரது சிறுவயதிலிருந்தே அவருக்கு அரசியில் தொடர்பு இருந்திருக்கிறது. அவருடைய அப்பா மூலமாக, அரசியல் சிந்தனைகளும், மக்கள் தொடர்பு சிந்தனைகளும் அவருக்கு ஆரம்பத்திலிருந்தே இருக்கிறது என்பது தெரிகிறது.

விஜயகாந்திடம் பிடித்தமான விசயம் அவருடைய துணிவு மற்றும் தீர்க்கமான முடிவுகள். நான் வருவேன், வரமாட்டேன், வெளியில் இருப்பே, ஓரமா இருப்பேன் இந்த மாதிரி பேச்சு எங்கிட்ட கிடையாது ”நான் கண்டிப்பாக வருவேன்” என்று ஒரு படத்தில் தான் அரசியலுக்கு வருவது பற்றி வசனம் பேசுவார், அப்படித்தான் அவருடைய செயல்பாடுகள் இதுவரை இருந்துள்ளன. ஒவ்வொரு முறை அவருக்கு கிடைக்கும் வாக்கு எண்ணிக்கைகள் அதிகரிக்கும்போது மற்ற கட்சிகளால் இதனால் தான் அவருக்கு வாக்கு எண்ணிக்கை அதிகரித்தது, அதனால்தான் வாக்கு எண்ணிக்கை அதிகரித்தது என ஒவ்வொரு காரணம் கூறப்படுகிறது. அவர் வளர்ச்சிப்பாதையில் இருக்கிறார் என்ற நிதர்சனமான உண்மையை யாராலும் ஜீரணித்துக்கொள்ள முடிவதில்லை..

விஜயகாந்தை பற்றிய இந்த புத்தகம் கூட விஜயகாந்த் படம் பார்ப்பதுபோல்தான் இருக்கிறது. சண்டைக்காட்சிகள், சில காதல் காட்சிகள், ஆவேசமான போரட்டங்கள், அரசியல் கலம் என ஒரு விஜயகாந்த் படத்தை நம் கண்முன் நிருத்துகிறார். புத்தக்த்தில் அவ்வப்போது வரும் சண்டைக்காட்சிகளை ஆசிரியர். சினிமாவில் வரும் சண்டை போலவே விவரித்துள்ளார். இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க இந்த (URL) முகவரிக்கு செல்லுங்கள்: http://nhm.in/shop/978-81-8493-118-1.html

Wednesday, October 28, 2009

ஒருவர் சாதனை புரிந்ததும் கை தட்டிவிட்டு, கை குழுக்கிவிட்டு, சென்றுவிடாமல் அந்த சாதனையாளரின் வாழ்க்கையை பற்றிய விசயங்களை நாம் அறிந்துகொள்வது அவசியம். அப்படி அறிந்துகொள்வதன் மூலமாக நம்முடைய செயல்பாடுகளில் ஏற்பட்டிருக்கும் இடர்பாடுகளை பற்றி கவலைப்படாமல் உத்வேகத்துடன் செயல்பட சாதனையாளர்களின் வாழ்க்கை நமக்கு உதவும். ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் பெற்றதற்காக தமிழ் திரையுலகினர் விழா எடுத்தபோது பேசிய நடிகர் பார்த்தீபன் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருது வாங்கியதன் மூலமாக நம்மாலும் வாங்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார் என்று கூறினார், உண்மையான வார்த்தைகள் அவை. திரை துறையினருக்கு மட்டுமல்லாது அனைத்துறைகளில் உள்ளவர்களுக்கும் உத்வேகத்தை கொடுக்கும் விசயங்கள் அவரது வாழ்க்கையில் இருப்பது தெரிகிறது.

எல்லா புகழும் இறைவனுக்கே என்று எளிமையாக ஒதுங்கிக் கொண்டாலும், அந்த புகழ் பெருவதற்குறிய அனைத்து பணிகளையும் நாமே செய்ய வேண்டும். ரஹ்மான் அவர்களுடைய செயல்பாடுகள் விளக்கும் விசயம் இதுதான். இதையேதான் அவருடைய அம்மாவும் அறிவுரையாக கூறியிருக்கிறார் “எப்பவும் இன்னொருத்தரை நம்பி நீ இருக்கக்கூடாதுப்பா, உன்னால தனியா என்ன என்ன செய்ய முடியும்ன்னு யோசி” தனது இசைப் பயணத்தை துவங்குவதற்கு முன்பாக அவருடைய தாயார் சொன்ன வார்த்தைகள் இவை. புத்தகத்தை படித்து முடித்ததும் இப்போதுவரை அந்த வார்த்தைகளை அவர் பின்பற்றி வந்திருப்பது தெரிகிறது.

சினிமாவில் சில சமயங்களில் கதாநாயகனைவீட சில காட்சிகளில் வரும் கதாபாத்திரங்கள் அதிகம் புகழப்படும் விதமாக அமைந்துவிடும் அது போல ரஹ்மான் அவர்களைப்பற்றிய புத்தகத்தை படித்து முடித்தது, ரஹ்மான் அவர்களைப் பற்றிய விசயங்கள் எதுவும் மனதில் தங்கவில்லை, மற்றொருவர் நம்மை ஆட்கொள்கிறார் அவர் ரஹ்மான் அவர்களுடைய தந்தை சேகர். இரண்டு மூன்று அத்தியாயங்களில் மட்டுமே இவரைப்பற்றிய விபரங்கள் இருந்தாலும் இவர் நம் மனதில் தங்கிவிடுகிறார். மிகக்கடுமையான உழைப்பாளியாக வாழ்ந்த அவரது வாழ்க்கையும் சோகமான அவருடைய இறப்பும் ஒரு தனி புத்தகம் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகிறது. புரிகிறதோ இல்லையோ குழந்தை பருவத்திலேயே இசையை கற்றுக்கொடுக்க ஆரம்பித்து, செல்லும் இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்று இசையையும், உலகையும் உணர்த்திய சேகர் போன்ற ஒருவர் தந்தையாக கிடைத்த பிறகு ரஹ்மான் ஆஸ்கார் வாங்காமல் இருந்தால்தான் ஆச்சரியம். புத்தகத்தின் ஈரமான பக்கங்கள் இவை.

ஒன்பதாம் வகுப்பு வரை ஊதாரித்தனமாக சுற்ற விட்டு விட்டு பத்தாம் வகுப்பில் தன் மகன் மாநில அளவில் மதிப்பெண்கள் பெற வேண்டும் என விரும்பும் தந்தைகளுக்கு மத்தியில், சேகர் தன்னுடைய மகனை மிகத் தெளிவாக திட்டமிட்டு சிற்பமாக செதுக்கியுள்ளது தெரிகிறது. தன் மகன் இப்படி ஆக வேண்டும், அப்படி ஆக வேண்டும் என கணவு கண்டு கொண்டிருக்கும் தகப்பன்களுக்கு சேகர் அவர்களுடைய நடவடிக்கைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவருடைய செயல்களில் இருந்து எல்லா தகப்பன்களும் பாடம் கற்றுக் கொள்ளலாம்.

புத்தகத்தை படிப்பதற்கு முன்பு வரை திடிரென்று ஒரு இளைஞர் இசைத்துறையில் பிரபலமாகிவிட்டார் என்ற எண்ணம்தான் இருந்தது. ஆனால் புத்தகத்தை படித்து முடித்ததும்தான் புரிந்தது, நான்கு வயதிலிருந்து அவர் எடுத்துக்கொண்ட பயிற்சியும், முயற்சியுமே அவரை இவ்வளவு உயரத்திற்கு கொண்டுவந்திருக்கிறது. திடிரென்று அவர் மலை உச்சியில் தோண்றிவிடவில்லை ஒவ்வொரு படியாக ஏறி வந்திருக்கிறார். அவர் ஆஸ்கார் விருது வாங்கியதை கொண்டாடும் கூட்டத்திற்கு அவர் கடந்து வந்த வாழ்க்கை முறை மற்றும் அவருடைய முழுமையான உழைப்பு பற்றி தெரியவில்லை என்றே நினைக்கிறேன். தெரிந்திருந்தால் அவருக்கு விழா எடுத்திருக்க மாட்டார்கள் ஏனேனில் அவரது உழைப்பிற்கு முன்பாக ஆஸ்கார் மிக சாதாரணமான ஒன்றே. நிச்சயமாக ஆஸ்கார் அவரது பயணத்தில் எல்லையாக இருக்காது. அதுவும் ஒரு தொடக்கமாகவே அமையும்.

நீங்களும் நானும் கண்டிப்பாக அந்த விளம்பரத்தை பார்த்திருப்போம் ஆனால் அவற்றை உருவாக்கியது திலீப் என்கிற ஏ.ஆர்.ரஹ்மான் என்பது தெரிந்திருக்காது என ஆசிரியர் ஒரு இடத்தில் கூறியிருக்கிறார். உண்மைதான் பல விசயங்கள் ரஹ்மானின் அடையாளங்கள் இல்லாமல் நம்மை கடந்து போயிருக்கிறது என்பது ரஹ்மான் பற்றிய புத்தம் படிக்கும்போதுதான் தெரிகிறது.

இளையராஜா பற்றிய விபரங்களை எழுதும்போது ஆசிரியர் நடுநிலமை கடைபிடிக்க முயற்சி செய்திருப்பார்போல் தெரிகிறது. இருவர் பற்றி எழுதும் போதும் ராஜாவின் ரசிகர்கள், ரஹ்மானின் ரசிகரகள் என்ற கண்னோட்டத்திலேயே எழுதியுள்ளார். அது அவசியமே இல்லை, இளையராஜாவை தாண்டி ரஹ்மான் சென்று விட்டார் என்று இனி வெளிப்படையாகவே சொல்லலாம். அதே போல் ரஹ்மான் இளையராஜாவிடம் பணியாற்றியவர் என்ற செய்திதான் பரவலாக தெரிந்திருந்தது ஆனால் இளையராஜா ரஹ்மானின் அப்பாவிடம் பணியாற்றியவர் என்ற விபரம் இந்த புத்தகத்தின் மூலமாக தெரிந்துகொண்டதும் ஆச்சரியமாக இருந்தது.

புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் அந்த அத்தியாயம் சம்பந்தப்பட்ட தலைப்புகளையே கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தெய்வம் தந்த பூ, பூவுக்கென்ன பூட்டு, ஓர் அழகைக் கண்டேனே போன்ற தலைப்புகள் கவித்துவமாக இருந்தாலும் தனிமைப்பட்டு நிற்பதாகவே தெரிகிறது.

சிறிய புத்தகம் என்றாலும் ரஹ்மானைப் பற்றிய முழு விபரங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது. அவருடைய சிறுவயதிலிருந்து படிப்படியாக அவரின் வாழ்க்கையில் நிகழ்ந்த மிக முக்கியமான நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்தியுள்ளார். விளையாட்டுத்தனமாக ஒரு ஆர்வத்தில் இசை பயின்றது பின்னர் அதுவே வாழ்க்கையாகிப் போனது, குடும்ப சுமையை ஏற்றுக்கொண்டது, நண்பர்களுடன் சேர்ந்து இசை குழு ஆரம்பித்தது, இசை தொடர்பாக படித்தது என ரஹ்மான் அவர்களின் வாழ்க்கை முழுவதும் செயல் முறைகளாக நிறைந்து கிடைக்கிறது. அவருடைய பழக்க வழக்கங்கள் பல அவருடைய சிறு வயதிலிருந்தே பின்பற்றி வந்திருக்கிறார் என்பது தெரிகிறது குறிப்பாக சொல்ல வேண்டுமானால் அவர் இரவில் பணியாற்றும் பழக்கத்தை சொல்லலாம்.

உலக தலைவர்கள், உலக சாதனையாளர்கள் என நமக்கு பரிச்சயமில்லாத நபர்களைப் பற்றி படிக்க ஆர்வம் செலுத்தம் நாம், நம் அருகில் இருக்கும் சாதனையாளரான ரஹ்மான் அவர்களைப் பற்றியும் படிக்க வேண்டியது அவசியம். முன்னேற நினைப்பவர்களுக்கு உதவும் நூலாகவும் இது அமைந்திருக்கிறது. இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க இந்த முகவரிக்கு (URL) செல்லுங்கள்: http://nhm.in/shop/978-81-8493-187-7.html

Saturday, August 8, 2009

”என் ஜன்னலுக்கு வெளியே” தலைப்புக்கு ஏற்றமாதிரிதான் புத்தகமும் அமைந்துள்ளது. ஜன்னலோரம் உட்கார்ந்து நாம் வீதியை பார்ப்பதுபோல், ரசிப்பதுபோல், மாலன் அவர்கள் சமுதாயத்தை பார்த்துள்ளார், ரசித்துள்ளார். சமுதாயத்தில் நாம் தினமும் பார்த்துக்கொண்டிருக்கும், கேட்டுக்கொண்டிருக்கும் விசயங்களை அடிப்படையாக வைத்தே கட்டுரைகளை எழுதியுள்ளார்.

ஜன்னலுக்கு வெளியே ஆசிரியர் வெறும் பார்வை பார்த்தாலும், அவருடைய பார்வையின் பரிணாமம் அலாதியானது. தமிழக அரசியல், அமெரிக்க அரசியல், விடுதலைப்புலிகள், இணையத்தில் தமிழின் வளர்ச்சி என பல துறைகளை தாண்டி அவரது பார்வை விரிவடைந்துள்ளது.

சில விசயங்கள் சமுதாயத்தில் நிகழும் போது நமக்கு சில கேள்விகள் தோன்றும் அந்த கேள்விகள் நமக்கு மட்டும்தான் தோன்றுகிறதா! யாரும் இதை கண்டுகொள்வதில்லையே என அவ்வப்போது சந்தேகங்கள் நம் மனதில் எழும். இந்த புத்தகத்தை படிக்கும் போது நமக்கு தோன்றிய பல கேள்விகளை மாலன் அவர்களும் கேட்டுள்ளார் என தெரிகிறது. பொதுவாக நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி சிந்திக்கிறோம் இயலாமை காரணமாக சும்மா இருந்துவிடுகிறோம்.
தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் நடந்துகொண்டிருக்கும் வாரிசு அரசியல், வண்முறை அரசியல் பற்றியும், வோட்டு வாங்குவதற்காக இங்கே ஒன்று பேசிவிட்டு வெளிநாடு சென்று அங்கே சம்பிரதாயம் என்ற பெயரில் மாற்றி பேசிவிட்டு திரும்பவும் இங்கே வந்து பழையபடி பல்டி அடிக்கும் அரசியல்வாதிகளை பற்றி ஆசிரியர் எழுதியுள்ளை படிக்கும் போது இந்த விசயம் நமக்கு புரிகிறது. மாலன் அவர்கள் கட்டுரை எழுதுவதனாலோ அதை நாம் படிப்பதாலோ மாற்றம் ஏற்பட்டுவிடப்போவதில்லை ஆனால் குறைந்த பட்சம் சமுதாயத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்ற உண்மை நிலைமை தெரிந்துகொள்ள அவருடைய கட்டுரைகள் நமக்கு உதவும்.

மாலன் அவர்களின் கட்டுரைகளை புதியதாக கட்டுரை எழுதுபவர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்கும். கற்பனையாக எழுதாமல் தனது கருத்துக்களை மேலோட்டமாக சொல்லி, சொல்லவந்த விசயத்திற்கு தேவையானவற்றை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்தே எடுத்துள்ளார். உதாரணமாக கலைஞரை பற்றி எழுதுகிறார் என்றால், என்னென்ன தேதிகளில் எந்தெந்த பத்திரிக்கைகளில் கலைஞர் என்ன சொல்லியிருக்கிறார். தற்போது குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட பத்திரிக்கையில் என்ன சொல்லியிருக்கிறார் என முழு ஆதாரத்தோடு விளக்கி தன்னுடைய கருத்தை உறுதிபடுத்துகிறார். ஒவ்வொரு கட்டுரையும் ஒரு ஆய்வறிக்கை போல் தெளிவாக இருக்கிறது. ராமர் பாலம் பிரச்சனையை எடுத்துக்கொண்டால் அதிலுள்ள அனைத்துதரப்பு விசயங்களையும் ஆதாரத்தோடு கொடுத்து ராமன் எந்த கல்லூரியில் படித்தான் என்ற கலைஞரின் கேள்விக்கு ஸ்டாலின் எப்படி பாலம் கட்டினாரோ அதே போல்தான் ராமனும் பாலம் கட்டினார் என தெளிவாக கட்டுரையை பதிவு செய்துள்ளார். சினிமாவில் விஜயகாந்த் ஒவ்வொரு விசயத்திற்கும் புள்ளி விவரமாக விளக்குவாரே அதுபோல தெளிவாக இருக்கிறது ஒவ்வொரு கட்டுரையும் உதாரணமாக பெட்டோல், டீசல் விலை உயர்வு சம்பந்தமான கட்டுரையை சொல்லலாம். ஒவ்வொரு விசயத்திற்கும் தேவையான விபரங்களை எங்கிருந்து பெருகிறார் என தெரியவில்லை. ஒவ்வொரு கட்டுரையையும் உணர்ச்சிவசப்படாமல் நிதானமான பண்புடன் எழுதியுள்ளார்.

மாலன் அவர்களின் கட்டுரைகள் சமுதாயத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் விசயங்களை அடிப்படையாக கொண்டது. எனவே அவர் கட்டுரைகளை எழுதிய தேதிகளில் நடந்துகொண்டிருந்த பல விசயங்கள் தற்போது முடிவுக்கு வந்த பிறகு நாம் புத்தகத்தை படிப்பதால் பல விசயங்கள் மனதில் தோன்றுகின்றன. குறிப்பாக 05.07.2006-ல் ஆசிரியர் விடுதலை புலிகள் பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார் அதில் விடுதலைப்புலிகளின் பிடிதளர்ந்து வருவதை குறிப்பிட்டு அவர்களின் அடிப்படை எண்ணமே மாற வேண்டும். அரசியல் பாதைக்கு திரும்ப வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் இதை படிக்கும் போது புலிகளின் இப்போதைய நிலைமை ஞாபகம் வருகிறது. அதே போல தேர்தலில் மற்றவர்கள் ஆச்சரியப்படும்படி விஜயகாந் தேர்ந்தெடுத்த விருதாச்சலம் தொகுதி நிலவரம் பற்றியும் அதில் உள்ள சவால்கள் பற்றியும் குறிப்பிட்டு ரசிகர்கள் உழைத்தால் வெற்றி பெறலாம் என்று எழுதியிருந்ததையும் குறிப்பிடலாம்.

ஆட்கள் மாறினால் ஆட்சி மாறலாம் அரசியல் மாறாது என்பது பற்றி எழுதியுள்ள கட்டுரையில் மின்னணு வாக்குப்பதிவு ஏன் பயன்படுத்தவில்லை என்று கேள்வி கேட்டு வாக்கு சீட்டு பயன்படுத்துவதால் உண்டாகும் கல்லஓட்டு பிரச்சனையை எழுதியிருந்தார். கடந்த தேர்தலுக்கு பிறகு மின்னணு வாக்கு பதிவு நடைபெற்றாலும் கல்லஓட்டு குறையாது என்பதை புரிந்திருப்பார் என்று நினைக்கிறேன்.

இந்த புத்தகத்தில் பல இடங்களில் அரசியல்வாதிகள் நமக்கு கொடுக்கும் வாக்குறுதிகள் பொய்யானவை என்பதை ஆதரத்தோடு நிருபித்துள்ளார். அரசியல்வாதிகள் கொடுக்கும் வாக்குறுதிகளை அதன் அடிப்படையிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை வழியுருத்தியுள்ளார். உதாரணமாக காவிரி நீர் பிரச்சனை விவகாரத்தில் நீதி மன்றத்தில் மேல் முறை செய்ய முடியாது என விளக்கியிருப்பதை கூறலாம்.

கண்ணகிக்கு அறிவு இருக்கிறதா என ஆரம்பித்து கண்ணகியை பற்றி மதிப்பு குறைவாக பெரியார் எழுதிய கட்டுரையை படித்திருக்கிறேன் அவரின் கொள்கைகளை பின்பற்றும் கலைஞர் அதற்கு நேர்மாறாக கண்ணகிக்கு புகழ்மாலை சூட்டிக்கொண்டிருக்கிறார் இந்த முரண்பாடான விசயத்தில் ஆசிரியர் ஒரு கட்டுரையில் ”படைத்தவனை விடவா பாத்திரம் பெரிது” என அருமையான கேள்விகேட்டுள்ளார். இந்திய வம்சாவளி பற்றி ஆசிரியர் எழுதியுள்ளது மிகவும் உண்மை எதை கொண்டாதுவது என்ற வரைமுறை நமக்கு தெரிவதில்லை.

இந்த புத்தகத்தின் மூலமாக பல புதிய விசயங்களை தெரிந்துகொள்ள முடிகிறது அவை:
அமெரிக்க அதிபர்கள் யாராலும் வெள்ளை புறாவை பறக்க வைக்க முடியாது என்பதையும், அமெரிக்காவின் உண்மை நிலவரம் பற்றியும் தெளிவாக உணர முடிகிறது. மொத்தமுள்ள 195 நாடுகளில் 130 நாடுகளில் அமெரிக்கா தனது படையை நிறுத்தியுள்ளதையும். ரகசியமாக பாதுகாக்கப்படும் ஆவணங்களை 30 ஆண்டுகளுக்கு பிறகு மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் அவர்களின் நடைமுறை பற்றியும் தெரிந்துகொள்ள முடிகிறது. பெண்கள் தினம் என்பது காதலர் தினம் போல்தான் என நினைத்திருந்தேன். அதற்கு ஒரு அர்த்தமுள்ள வரலாறு இருப்பதை மாலன் அவர்கள் மூலமாக தெரிந்துகொள்ள முடிந்தது. சென்னையின் வரலாற்றை படிக்கும்போது சென்னைக்கு இப்படி ஒரு வரலாறு இருப்பதை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

புத்தகத்தில் ஒரு இடத்தில் அருமையான ஒரு வாசகம் வருகிறது “பயன்படுத்தாத அறிவு சுமை” இந்த புத்தகத்தை முழுவதும் படித்ததும் ஒரு விசயம் புரிகிறது. மாலன் அவர்கள் தான் கற்ற, கேட்ட, பார்த்த என அனைத்து விசயங்களையும் தனக்கு சுமையாக இலலாத வகையில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க கீழே உள்ள முகவரிக்கு (URL) செல்லுங்கள்

URL IS: http://nhm.in/shop/978-81-8493-063-4.html


Tuesday, July 14, 2009

ஒரு பத்திரிக்கை பேட்டியில் ஆண் எப்போது அழகு என்று ராதிகா அளித்த பேட்டியில் தனது தந்தைக்கு எழுத படிக்க தெரியாது ஆனால் படித்தவர்கள்கூட பேசாத பல விசயங்களை அவர் பேசுவார் அதன் ரகசியம், அதற்கென ஒரு ஆளை வேலைக்கு வைத்து தினமும் செய்தித்தாளில் வரும் அனைத்து விசயங்களையும் அறிந்துகொண்டு மற்றவர்களிடம் உரையாடுவார் என்று கூறியிருந்தார். தன்னிடமிருக்கும் குறைகளை குறையே இல்லாதவகையில் மற்றியமைத்துக்கொண்ட இந்த ஆச்சரியமான மனிதரைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன். இந்த புத்தகத்தின் மூலமாக அவரைப்பற்றி முழுமையாக அறிந்துகொள்ள முடிகிறது.

எம்.ஜி.யார், சிவாஜிக்கு எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை M.R.ராதா என்று தெரிந்தாலும், நடைபெற்ற பல நிகழ்வுகளால் அவரை கொண்டாடாமல் விட்டுவிட்டார்கள் இருந்தாலும் அதையும்மீறி இன்றளவும் M.R.ராதாவைப்பற்றி நாம் பேசிக்கொண்டிருக்க முக்கியக்காரணம் அவருடைய ஆளுமைப்பண்புகள் மற்றும் மனிதர்களை அவர் படித்திருந்த விதம். ஏதோ சினிமா நடிகரைப்பற்றி படிக்கிறோம் என்றில்லாமல் இந்த புத்தகத்தில் அவரின் அனுபவத்தின் வாயிலாக நாமும் கற்றுக்கொள்ள வேண்டிய பல விசயங்கள் உண்டு. ஒரு துறையில் புதிதாக நாம் நுழையும்போது யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை கதாநாயகனாக அறிமுகமாகப்போகும் அசோகனுக்கு M.R.ராதா சொல்லும் புத்திமதியிலேயே நாமும் புரிந்துகொள்ளலாம். அசோகன் அவர்களால் கதாநாயகனாக பிரகாசிக்க முடியாமல் போன காரணத்தை ஆரம்பத்திலேயே சொன்ன M.R.ராதாவின் அனுபவம் சிறப்புவாய்ந்தது.

M.R.ராதாவிடம் நாம் கற்றுகொள்ள வேண்டிய இரண்டு விசயங்கள் உள்ளன:

1. நம்முடைய குறைகள் என்னென்ன என்பதை முழுமையாக தெரிந்து கொண்டு அதை நிறைவான விசயங்களாக மற்றிக்கொள்வது. தனக்கு எழுதப்படிக்க தெரியாது இதனால் அன்றாட செய்திகளை அறிந்துகொள்ள முடியாது இதை ஒரு குறையாக கருதாமல் அதற்காக ஒரு நபரை நியமித்து செய்திகளை வாசித்துக்காட்ட சொல்லி செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொண்டு அதை நாடகத்திற்கு பயன்படுத்தியிருக்கிறார். சினிமாவில் தன்னால் என்ன செய்ய முடியும் என்பதையும் தெளிவாக அறிந்துவைத்திருக்கிறார் அதை அவரே ஒரு இடத்தில் இப்படி சொல்கிறார் ‘கனேசன் மாதிரியெல்லாம் எனக்கு வராது அதனால நான் என்ன செய்கிறேனோ அதை படம் எடுத்துக்க’.

2. நம்மைவீட மற்றவர்கள் யாரும் உயர்ந்தவர்கள் கிடையாது என்ற எண்ணம். நாடகம் பார்க்க பெரியார், அண்ணா போன்ற பெரியவர்கள் வந்திருக்காங்க என்று சொல்லும் போது பதட்டபடாமல் வரட்டுமே இப்ப என்ன அதுக்கு ‘என்னைவீட பெரியவங்களா நான் யாரையும் நினைத்துகூட பார்ப்பதில்லை’ என்று சொல்கிறார். சொல்வதோடு இல்லாமல் அதை பல இடங்களில் செய்தும் காட்டியிருக்கிறார். நாமாக இருந்தால் ஆங்கிலம் எனக்கு தெரியாது தமிழில் சொல்லுங்க என்று சொல்லுவோம் அதையே M.R.ராதா இப்படி சொல்கிறார் ‘நீங்க ஆங்கிலத்தில் பேசினா எனக்கு மட்டும்தான் புரியும் மற்றவர்களுக்கு புரியாது அதனால தமிழில் பேசுங்க’ அதுவும் தன்னை கைது செய்ய வந்திருக்கும் போலிஸிடம் பேசுவதையும், சிவாஜி இம்பால கார் கொடுக்க மறுக்கும்போது அதற்கு கோபப்படாமல் M.R.ராதா என்ன செய்தார் என்று படித்தீர்களானால் அவருடைய அளுமை உங்களுக்கு புரியும்.

புத்தகத்தை படிக்கும் போது ஒரு விசயம் நமக்கு புரிகிறது அந்தகாலத்தில் இருந்தவர்கள் ஒரு நேரடியான அனுகுமுறையை கையாண்டிருக்கிறார்கள். என்.எஸ்.கே மீது M.R.ராதா கோபம் கொள்வதும் அதை கேள்விப்பட்டு M.R.ராதா முன்பு வந்து நின்று சுடுடா என என்.எஸ்.கே கூறுவதாகட்டும். அண்ணாபற்றி விமர்சனம் செய்து அதை புத்தகமாக எழுதி அண்ணாவிடமே M.R.ராதா கொடுப்பதாகட்டும். எம்.ஜி.யாரைகூட ஆள்வைத்து சுடவில்லை தானே நேரடியாக சென்று சுட்டிருக்கிறார். பிரச்சனைகள் முடிந்த பிறகு மனோரமாவின் மகன் திருமணத்தில் எம்.ஜி.யாரிடம் சென்று என்ன ராமசந்திரா செளக்கியமா என M.R.ராதா விசாரிப்பதாகட்டும், சரியோ தவறோ அதை நேரடியாகவே செய்திருக்கிறார்கள் என்று படிக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. பல இடங்களில் தனக்கு சரியென பட்ட விசயத்தை சம்பந்தப்பட்டவர்களிடமே சென்று அவர்களை கிண்டல் செய்துள்ளார். உடல் நிலை சரியில்லாத பெரியாரிடம் பணம் கொடுத்து இப்போது உங்களுக்கு உடல் சரியாகிவிடும் என்று கூறுவதையும் ரங்காராவிடம் இவரு நல்லவரா நடிக்கிறவரு லேட்டா வராரு என்று சொல்வதையும் உதாரணமாக கூறலாம்.

M.R.ராதாவின் செயல்பாடுகள் சற்று முரட்டுத்தனமாக நமக்கு தோன்றினாலும் அவரைப்பொருத்தவரையில் அது சாதாரணமாக செயலாகவே இருந்திருக்கிறது. ஏனெனில் அவரது மனநிலை சிறுவயதிலிருந்தே அப்படித்தான் பக்குவப்பட்டிருக்கிறது. பல ஊர்களுக்கு தனியாக பயணம் செய்து, பல மனிதர்களிடம் வேலைபார்த்து அடிபட்டு, மிதிபட்டு மனிதர்களை படித்திருக்கிறார் இதனால் தன்னை தற்காத்துக்கொள்ள வேண்டியிருந்தாலும், கோபம் ஏற்படும்போதும் சம்பந்தப்பட்டவர்களை போட்டுத்தள்ளுவது என்றே சிந்திதிருக்கிறார். எம்.ஜியாருக்கு முன்பே பலபேரிடம் சுட்டுவிடுவேன் என்று கூறுவது, திருப்பதிக்கு குண்டு வைக்க முயற்சிப்பது என அவரது சிந்தனையே அப்படித்தான் இருந்துள்ளது. அதை பிரதிபலிக்கும் விதமாக எல்லாம் முடிந்து இறுதியாக இப்படி சொல்கிறார் ” குடும்பத்தில் சண்டை வருவதில்லையா, நன்பர்களுக்கிடையே சண்டை வருவதில்லையா அதுபோல்தான் இதுவும், இரண்டு நன்பர்கள் அடிச்சிகிட்டோம். கம்பிருந்தால் கம்புல அடிச்சிப்போம், கத்தியிருந்தா கத்தியில அடிச்சிப்போம், துப்பாக்கி இருந்தது துப்பாக்கில அடிச்சிக்கிட்டோம் அவ்வளவுதான்”.

M.R.ராதாவின் பிரச்சனையே அவர் ஒரே மாதிரியான சிந்தனையை கொண்டிருப்பதுதான். சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாத்தி பேசுவது, சக மனிதர்களைக் கண்டால் சஞ்சலமடைந்து சொன்னதை மாற்றி பேசுவது போன்ற விசயங்களெல்லாம் அவரிடம் கிடையாது. எல்லா சூழ்நிலையிலும் தன்னுடைய நிலையான சிந்தனையை வெளிப்படுத்தியிருக்கிறார். முதலில் கடவுள் இல்லைனு சொன்னாங்க, பிறகு அண்ணா ஒரே கடவுள் என்று சொன்னார் பெரியாரும் அதை ஒத்துக்கிட்டார் ஆனா அதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என தன்னுடைய தனித்தன்மையை வெளிப்படுத்துகிறார். சாதாரண தொண்டனாக இருந்தால் தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே என சென்றிறுப்பான்.

ஆசிரியர் எம்.ஜியாருக்கும் M.R.ராதாவிற்கு ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனையிலிருந்து எம்.ஜியாரை சுடும் வரை விறுவிறுப்பாக எழுதியுள்ளார். அந்த சமயத்தில் M.R.ராதாவின் பேச்சுக்கள் எப்படி தவறாக பொருள்கொள்ளப்பட்டது என்பதையும் விளக்கியிருப்பது சிறப்பு.

M.R.ராதாவிடம் நாம் அசந்து போகும் இரண்டு விசயங்கள் உண்டு. 1. உதவி கேட்டதற்காக உடல் நிலை சரியில்லாவிட்டாலும் காலில் ரத்தம் வடிய மேடையேறி நடித்து கொடுத்த பண்பு மற்றும் தன்னுடன் பணியாற்றுபவருகளிடம் அவர்காட்டும் பரிவு. 2.அரசாங்கமே எதிர்த்தாலும் தான் நினைத்ததை செய்து காட்டும் போரட்ட குணம்.

தற்போதுள்ள சினிமா நடிகைகளிடம் ஒரு கேள்வி அவ்வப்போது கேட்கப்படுவண்டு ‘உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?’ பதில் சொல்ல முடியாமல் ஒருவழியாக சமாளித்து அடுத்த கேள்விக்கு சென்று விடுவார்கள். யாராவது ஒரு நடிகரின் பெயரை சொல்லிவிட்டால் தன்னுடைய மார்கெட் பாதிக்கப்படுமோ என்ற எண்ணம். எந்த பிரச்சனையும் இல்லாத இந்த காலகட்டத்திலேயே இப்படி என்றால்… M.R.ராதாவின் இறுதி சடங்கில் சினிமா நடிகர்கள் சிலர் கலந்துகொண்டார்கள் என்று படிக்கும்போது அப்போதைய சூழ்நிலையை புரிந்துகொள்ள முடிகிறது.

ஒரு மிகச்சிறந்த ஆளுமை குணம் நிறைந்த ஒருவரைப்பற்றி படிக்க விரும்புபவர்கள் இந்த புத்தகத்தை நிச்சயம் படிக்க வேண்டும். இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க கீழே உள்ள முகவரிக்கு (URL) செல்லுங்கள்.

URL IS: http://nhm.in/shop/978-81-8368-636-5.html

Friday, July 3, 2009

மாற்றம் இந்த வார்த்தையை ஏற்றுக்கொள்ளாத, அனுமதிக்காத எந்த விசயமும் காலம் கடந்து நிலைத்திருக்காது. அதற்கு சரியான உதாரணம் ராமாயணம் என இந்த புத்தகம் படிக்கும்போது தெரிகிறது. தான் செல்லுமிடமெல்லாம் அந்த இடத்தின் பண்புகளுக்கேற்ப மாற்றும் பெறும் தண்ணீர் போல ராமாயணம் நாடுகளை கடந்து, காலாச்சார மாற்றங்களை ஏற்று கொண்டு, அந்த அந்த நாட்டு மக்களின் பண்புகளுக்கேற்ப புது புது வடிவங்களில் உருவாகி சிறப்புடன் விளங்குகிறது.

ராமகியன் படிக்கும்போது இவ்வளவு வகையான ராமாயணம் இருக்கிறதா என நம்மால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. நமக்கு தெரிந்தது ஒன்று அல்லது இரண்டு ராமாயணம்தான் அதுவும் முழுமையாக தெரியாது. இவ்வளவு வகையான ராமாயணங்களை படித்து, தனித்தனி விசயங்களாக தொகுத்து, விருவிருப்பு குறையாமல் ஒரு புத்தகத்தை உருவாக்கியுள்ளதில் ஆசிரியரின் கடுமையான உழைப்பு தெரிகிறது.

வியாபார உலகத்தில் விற்பனையாளர்களுக்காக ஒரு கதை சொல்லப்படுவதுண்டு ஒரு ஊரில் செருப்பு விற்பனை செய்வதற்கு முன்னோட்டம் பார்பதற்காக ஒரு விற்பனையாளர் ஒரு ஊருக்கு செல்கிறார் அங்கே யாருமே செருப்பை பயன்படுத்துவதில்லை என்பதை காண்கிறார் எனவே இங்கே செருப்பு விற்பனை செய்ய சாத்தியமில்லை என்று திரும்பி வந்துவிடுகிறார். பின்னர் அதே ஊருக்கு இன்னொரு விற்பனையாளர் செல்கிறார் அந்த ஊரில் யாருமே செருப்பை பயன்படுத்தியதில்லை என்பதை அறிந்ததும் உற்சாகம் அடைந்து இங்கே செருப்பு விற்பனைச் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன எனவே உடனே தேவையான செருப்புகளை இங்கே அனுப்புங்கள் என கம்பெனிக்கு தகவல் அனுப்புகிறார். ஒரே இடம், ஒரே நோக்கம் ஆனால் இருவரின் சிந்தனையும் மாறுபட்டுள்ளது ஒருவர் ஆக்கபூர்வமாக சிந்திக்கிறார், மற்றொறுவர் எதிர்மறையாக சிந்திக்கிறார். ராமாயணத்தை பொருத்தவரையிலும் இப்படித்தான் நடந்துள்ளது. இது நம் நாட்டில் நடந்திருக்க கூடாதா என ஏக்கம் கொள்கிறார்கள் தாய்லாந்து மக்கள் ஆனால் இங்கே ராமாயணத்தை குறை கண்டுபிடிக்கவும், குதர்க்கம் பேசவும்தான் பயன்படுத்துகிறோம். நாம் அதை வாழ்வியியல் நோக்கத்தோடு அனுகவில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் தாய்லாந்து மக்கள் ராமாயணத்தை ஒரு பண்பாடாக, கலாச்சாரமாக, வாழ்வியல் முறையாக அனுகியிருக்கிறார்கள் அதனால் தான் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வாழ்வியல் சிந்தனையோடு ராமாயணத்தை அனுகியிருப்பதால் தான் தாய்லாந்து, கம்போடியா, பர்மா, வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இவ்வளவு சிறப்பு பெற்றுள்ளது இதில் இஸ்லாமிய நாடுகளும் அடக்கம் என்பது நமக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அருகில் உள்ளவற்றின் அருமை தெரியாது என்று சொல்லப்படும் வாக்கியம் நிஜம்தான்போல் உள்ளது.

சின்ன சின்ன கிளைக்கதைகளை இணைத்து ராமாயணத்தை மேலும் அழகுபடுத்தியிருக்கிறார்கள். இராவணனின் முந்தைய பிறப்பு மற்றும் ராமரின் மனித அவதார நோக்கத்திற்காக ஒரு சிறு பகுதியை இணைத்திருப்பதும், ராமர் சீதை மீது சந்தேகம்கொள்ள காரணமான ஒரு நிகழ்ச்சியை சேர்த்திருப்பதாலும் ஒரு முழுமையை உணரமுடிகிறது.

நம்மை பொருத்தவரையில் ராமர் என்ன தவறு செய்தாலும் அதை ஞாயப்படுத்தவே முயற்சி செய்வோம். தவறு செய்திருந்தாலும் ஏன் செய்தார் என்று ஞாயப்படுத்தும்விதமாக விளக்கமாக எழுதுவோம் ஆனால் ராமகியனில் ராமரின் சில தவறான மனித பண்புகளையும் அப்படியே பதிவு செய்துள்ளார்கள். சீதையை கொல் என்று சொல்லும் போதும் அவளுடைய இதயமும் மிருகத்தின் இதயம் போலவே உள்ளது என்று சொல்லும் போதும் சாராசரி மனிதனாக நமக்கு தோன்றுகிறார்.

ராவணன் இறந்த பிறகு ராமருக்கும் சீதைக்கும் பிரச்சனை ஏற்படுவதும் அதை போக்க ராமர் எடுக்கும் முயற்சிகளை படிக்கும் போது அப்படியே நம்முடைய தமிழ் சினிமாவில் வரும் கதைகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது. சோகமாக இருப்பதுபோல் சூழ்நிலையை ஏற்படுத்தி, குழந்தைகளை காரணம் காட்டி, உயிர்விடப்போவதாக சொல்லி தன்னுடன் வர சீதையை அழைக்கும் போதும் சினிமாவில் பார்க்கும் அனைத்து விசயங்களும் நடக்கின்றன, சினிமாவில் வருபவர்கள் கெட்டவர்களாக இருந்து பின்னர் திருந்தி நல்லவர்களாகமாறி இதுபோன்று நடந்து கொள்வார்கள் ஆனால் ராமர் மேண்மைமிக்கவராக இருந்து பின்னர் சராசரி மனிதராக நடந்துகொள்கிறார்.

சீதை பற்றி நாம் தெரிந்து வைத்திருக்கும் விசயங்களை வீட அதிகமாக இந்த புத்தகத்தில் தெரிந்துகொள்ள முடிகிறது. சீதை தன்னம்பிக்கைமிக்கவளாக, கணவனை எதிர்த்து தனிமையில் வாழ்ந்து காட்டுபளாக, இறுதிவரை தன்னை ஒதுக்கிய கணவனுடன் சேரக்கூடாது என்ற வைராகியம் கொண்டவளாக விளங்குகிறாள்

நாடு, இனம், மொழி, கலாச்சாரம் மாறினாலும் பெண்களின் நிலையை பொருத்தவரையில் அப்படியேதான் இருக்கும் என்பதை ராமகியனிலும் அறிந்துகொள்ள முடிகிறது. சீதையிலிருந்து சிவன் மனைவி வரை அனைத்து பெண்களையும் தாழ்த்தியே எழுதப்பட்டுள்ளது.

வாலியின் இறப்பு புதுமையாக உள்ளது. வாலி கொல்லப்படவேண்டிய காரணத்தை முன்கூட்டியே உருவாக்கி, இந்தியாவில் உள்ள ராமாயணம்போல் இல்லாமல் ராமர் மீது பழி ஏற்படாதவகையில் ராமரால் வாலி கொல்லப்படும் நிகழ்ச்சியை மிக அருமையாக அமைத்துள்ளார்கள்.

ராமகியனில் நம்மை அதிர்ச்சியடைய, ஆச்சரியமைடய வைக்கும் இரண்டு நபர்கள் உண்டு ஒருவர் அனுமன் மற்றொறுவர் ராவணன். ஒழுக்கசீலராக, பிரம்மச்சாரியாக நாம் அறிந்திருந்த அனுமன் இல்லை இவர். கிட்டத்தட்ட கேம்ஸ்பாண்ட்போல அனுமனை வடிவமைத்துள்ளார்கள் செயல்திறன்மிக்கவர் அதே சமயத்தில் காமலீலையில் ஈடுபடுபவர். செல்லுமிடங்களிளெல்லம் பெண்களுடன் உல்லாசமாக இருக்கிறார். உச்சகட்டமாக ராவணனின் முன்பே மண்டோதரியை கற்பழிக்கிறார். அதே சமயத்தில் திட்டங்கள் தீட்டி வெற்றியடையவக்கும் செயல் வீரராகவும், நகைச்சுவை உணர்வு மிக்கவராகவும் திகழ்ந்துள்ளார்.

இன்னொருவர் ராவணன் மற்றவர்களிடம் ஒப்பிடும்போது மிகுந்த ஒழுக்கமுடையவர்போலவே திகழ்கிறார். அனுமனிலிருந்து அணைவருமே பெண்கள் விசயத்தில் ராவணனைவீட ஒருபடி தாழ்ந்தவர்களாகவே உள்ளார்கள். ராவணன் மற்றவர்கள்மீது கோபம் கொள்ள காரணமான முன்கதை சுருக்கமும், சீதைமீது கொண்டிருக்கும் காதலும் ராவணனின் செயலை ஞாயப்படுத்துகிறது. ராவணன் தன்னுடைய இறுதி நாளில் தன்னுடைய முடிவை அறிந்துகொண்டு போருக்கு புறப்பட்டு செல்லும் போது ஏற்படும் நிகழ்வுகள் மற்றும் அந்த நேரத்திலும் சீதையின் முகத்தை நினைத்துப்பார்த்து சிலாகித்து சீதை எப்போதும் என்னுடன் இருந்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்பது போன்ற விசயங்களை படிக்கும் போது ஒரு சோகமான கவிதைபோல அழகாக உள்ளது.

லாவோஸ், கம்போடிய, சீனா, ஜப்பான், இந்தோனேசியா, பர்மா போன்ற நாடுகளில் ராமயணத்தை அவர்களின் நாட்டிற்கேற்ப மாற்றம் செய்து அவர்களின் வரலாற்றை விளக்க ராமாயணத்தை பயன்படுத்தியுள்ளது நமக்கு ஆச்சரியமான செய்திதான். அதிலும் பர்மிய ராமாயணத்தில் ராவணனும் சுயவரத்தில் பங்கு கொண்டு சிவதனுசுவை எடுப்பது மிகவும் சுவாரசியமான விசயம்.

ராமாயணம் பற்றி அறிந்து கொள்ள விருபுபவர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம் இது. புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு விசயங்களை படிக்கும்போதும் அப்படியா! என்ற எண்ணம் மனதில் தோன்றுகிறது அதுவே இந்த புத்தகம் சிறந்த புத்தகம் என்பதற்கு உதாரணம். இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க கீழே உள்ள முகவரிக்கு (URL) செல்லுங்கள்.

URL IS: http://nhm.in/shop/978-81-8493-046-7.html

Thursday, June 25, 2009

நம்மிடையே பொதுவாக I.A.S படிக்க என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகள் பற்றிதான் அதிகம் விவாதிக்கப்படுகிறதே தவிர, I.A.S பணி எப்படிப்பட்டது என்பதை பற்றிய விவாதங்கள் குறைவு மேலும் அரசியல்வாதிகளை பற்றி விவாதிக்கும் அளவுக்கு I.A.S அதிகாரிகளைப் பற்றி செய்திதாள்களில் அதிகம் விவாதிக்கப்படுவதில்லை இதனால் அந்த பணி பற்றிய விசயங்களை நாம் அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. B.S.ராகவன் அவர்கள் எழுதியுள்ள இந்த புத்தகம் I.A.S அதிகாரி என்பவர் யார் அவரின் பணி என்ன என்பதை பற்றியும் தற்போது உள்ள I.A.S அதிகாரிகள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை பற்றியும் அறிந்துகொள்ள மிக உதவியக இருக்கும்.

ராகவன் அவர்களின் பணி அனுபவங்கள் நாம் எதிர்பார்க்காத பல அனுபவங்களை கடந்து செல்கிறது. ஒரு குதிரையை எப்படி நாம் அனுகவேண்டும். எந்தெந்த குதிரைகள் எப்படி நடந்துகொள்ளும். குதிரை சவாரி செய்யும் போது ஏற்படும் அனுபவங்கள், வன விலங்குகள் பற்றிய விபரங்கள், புலி வேட்டை பற்றிய விபரங்கள், யானையுடன் பழகிய அனுபவங்கள், பேய் உலாவும் சம்பவங்கள் என நம்மை ஆச்சரியப்படுத்தும் பல அனுபவங்களை பெற்றுள்ளார்.

ஒரு I.A.S அதிகாரியின் அனுபவம் பற்றிய புத்தகத்தை படிக்கும் போது ஏற்படும் ஒரு நல்ல விசயம் என்னவென்றால் பல தலைவர்களை பற்றிய விசயங்களை நாம் ஒரே புத்தகத்தில் அறிந்துகொள்ள முடியும். நேரு, இந்திராகாந்தி, ராஜிவ் காந்தி, லால் பகதூர் சாஸ்திரி, காமராஜ், தேச பந்து சித்த ரஞ்சன், பி.சி.ராய், அண்ணா துரை, ஜோதிபாசு, சென்குப்தா, எம்.ஜி.யார் என பல தலைவர்களை பற்றிய விபரங்களை இந்த புத்தகத்தில் அறிந்துகொள்ள முடிகிறது.

ஒருவரை பற்றி முழுமையாக அறிந்துகொள்ள அவரைப்பற்றி எழுதியுள்ள புத்தகங்களை படித்தால் முழுமையான விசயங்களை தெரிந்துகொள்ள முடியாது ஏனெனில் அதில் அவரைப்பற்றிய எதிர்மறையான விசயங்கள் இருக்காது. எம்.ஜி.யாரைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள விரும்பினால் எம்.ஆர்.ராதா பற்றிய புத்தங்களையும் நாம் படிக்க வேண்டும் அப்போதுதான் எம்.ஜி.யாரைப் பற்றிய விசயங்களை நாம் அறிந்துகொள்ள முடியும் அதுபோல ராகவன் அவர்கள் எழுதியுள்ள இந்த புத்தகத்தின் வழியாக பல தலைவர்களின் ஆளுமை பண்புகள் மற்றும் எதிர்மறையான விசயங்கள் போன்றவற்றை நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

காமராஜர், நேரு, இந்திராகாந்தி போன்ற பெருந்தலைவர்களும் முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய சில சூழ்நிலைகளில் பதட்டமடைவார்கள், பதட்டம் ஏற்படும் போது எப்படி நடந்துகொள்வர்கள் என்பதையும் இந்த புத்தகத்தில் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. டி.என்.சேஷன் அண்ணாதுரை அவர்களை பற்றி எழுதியதனால் ஏற்பட்ட பிரச்சனைகள் மற்றும் காமராஜர் திராவிடர் கலகத்தை விமர்சித்தது போன்ற விசயங்கள், அந்த தலைவர்கள் பற்றிய நேரடியான புத்தகத்தில் கூட இருக்காது என்றே நினைக்கிறேன்.

சாஸ்திரி அவர்களின் வியக்கவைக்கும் ஆளுமைப் பண்புகளையும் மற்றும் அவருடைய தவறுகளையும் இந்த புத்தக்த்தின் வாயிலாக நாம் அறிந்துகொள்ள முடிகிறது. இந்திரா காந்தி இந்த இந்த விசயங்களில் சிறந்தவாரக இருந்தார், சாஸ்திரி அவர்கள் இந்த இந்த விசயங்களில் தவறுகள் செய்தார் என்று படிக்கும் போது அவர்களை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது.

தேவையான அனைத்து ஆயுதங்களும் இருந்தால் நானே போரை வழிநடத்தி வெற்றியடைவேனே என்ற லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் வார்த்தைகள் சோர்வடைந்தவர்களை போரட தூண்டும் அற்புதமான வார்த்தைகள்.

ஒருதலைபட்சமாக மற்றவர்கள் பற்றியே குறை கூறாமல் தன்னுடைய அனுபவத்தில் தன்னுடைய தவறான புரிதல்களையும் அதனால் ஏற்பட்ட பிரச்சனைகளையும் வெளிப்படையாக கூறியுள்ளார்.

எல்லா காரியங்களிலும் வெற்றியடைவது எப்படி என்று பத்து தலைப்புகளில் ராகவன் அவர்கள் விளக்கியுள்ள விதம் மிக அருமையாக உள்ளது. இந்த விசயம் அனைவருக்கும் பயனுள்ளவையாக இருக்கும். பேச்சுவார்த்தை நடத்துவது எப்படி, எதிரில் உள்ளவரின் சிந்தனையை வெளிக்கொண்டுவருவது எப்படி என்பது போன்ற விசயங்களில் அவரின் சிறந்த அனுபவம் வெளிப்படுகிறது.

ராகவன் அவர்களின் அனுபவத்தின் வாயிலாக வங்கதேச மக்களின் கலாச்சாரம், நாட்டுப்பற்று, மொழிப்பற்று, ஒற்றுமையாக போரடும் குணம் போன்றவற்றை அறிந்துகொள்ள முடிகிறது. மேலும் அவர்களின் மீது தவறான புரிதல்களை ஏற்படுத்தும் அவர்களின் அதீதமான கோபத்தின் ஞாயமான காரணங்களையும் விளக்கியுள்ளார். நாம் நம்மால் சகித்துக்கொள்ள முடியாத விசயங்களுக்கு கூட கோபப்படுவதில்லை ஆனால் மேற்கு வங்க மக்கள் அப்படி இருபதில்லை என்று கூறி ஆசிரியர் சில சம்பவங்களை விளக்கியுள்ளார் அவற்றை படிக்கும் போது அவர்களின் கோபம் ஞாயமாகத்தான் தோன்றுகிறது.

நாம் யாரை முன் மாதிரியாக கொண்டிருக்கிறோம், எந்த விசயங்களில் ஆர்வம் செலுத்துகிறோம் என்பதை பொறுத்துதான் நம்முடைய வாழ்க்கை முறை மற்றும் நம்முடைய இலட்சியங்கள் அமையும். அதற்கு சரியான முன் உதாரணமாக ராகவன் அவர்களின் வாழ்க்கை அமைந்துள்ளது. முன் மாதிரி விசயத்தில் தான் ஒரு அதிர்ஷ்டசாலி ஏனெனில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட பல தலைவர்களுடன் தான் பணியாற்றியுள்ளேன் என அவரே இந்த புத்தகத்தில் கூறியிருக்கிறார். காந்திஜியுடன் பஜனை பாடுவது, நேருவின் உரையாடளை ரேடியோவில் கேட்க கொண்டிருந்த ஆர்வம் என அவரது ஆரம்ப கால ஆர்வங்களை படித்துவிட்டு பின்னர் அவரது அனுபவங்களை படிக்கும் போது அவர் ஆர்வம் காட்ட தேர்ந்தெடுத்த விசயங்கள் மற்றும் அவர் தேர்வு செய்திருந்த முன் மாதிரிகள் தான் அவரது வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது என்பதை நம்மால் உணர முடிகிறது. ஒரு சரியான முன்மாதிரி அமையாவிட்டால் என்ன ஆகும் என்பதற்கு தற்போதுள்ள இளைஞர்களின் நிலையையே உதாரணமாக காட்டியுள்ளார். அதிகபட்சமாக சினிமாதான் அவர்களுக்கு முன்மாதிரியாக உள்ளது என்ற அவரது கவலை ஞாயமானதுதான்.

ஒரு I.A.S அதிகாரி தான் சார்ந்திருக்கும் மாவட்டத்தில் எந்தெந்த விசயங்களுக்கு பொறுப்பாளி என பட்டியலிட்டுள்ளார் படிக்கும் போது இவ்வளவு வேலைகளை எந்த ஒரு அதிகாரியும் செய்வதில்லை என்பது நமக்கே புரியும் அதை உறுதி செய்யும் விதமாக ஆசிரியரே தற்போது உள்ளவர்களில் நூறு பேரில் முப்பது, நாப்பது பேர் தவறானவர்களாக இருக்கிறார்கள் என்று எழுதியுள்ளார்.

இது ஒரு I.A.S அதிகாரியின் பணி அனுபவமாக இருந்தாலும் அவருடைய அனுபவம் அனைத்து துறையை சார்ந்தவர்களுக்கும் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க கீழே உள்ள முகவரிக்கு (URL) செல்லுங்கள்.

URL IS: http://nhm.in/shop/978-81-8368-954-0.html