Sunday, December 2, 2018

பைரப்பா எழுதிய இந்த பருவம் நாவலை பத்தி சொல்லணும்னா இது ஒரு முழுமையான மகாபாரத கதை அல்ல இந்த நாவலை படிப்பதன் மூலமாக யாரும் மகாபாரத கதையை தெரிந்து கொள்ள முடியாது ஏற்கனவே மகாபாரத கதையை படித்தவர்கள் படிக்க வேண்டிய புத்தகம் இது. அவர்களும் கடைசி வாய்ப்பாக இந்த நாவலை வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில்  இது ஒரு உச்சகட்டமான நாவல் ஆரம்பத்திலேயே இதை படித்து விட்டால் அதன் மூலம் ஏற்படும் தர்க்க புத்தி ஆரம்பகட்ட மகாபாரதக்கதை புத்தகங்களுக்கும், பருவம் போன்ற உச்சகட்டமான புத்தகத்திற்கும் இடைப்பட்ட நாவல்களை ரசித்துப் படிக்க முடியாமல் செய்துவிடும். எனவே மகாபாரதம் தொடர்பாக படிக்கவேண்டிய புத்தகப் பட்டியலில் இறுதி தேர்வாக இந்த பருவம் நாவலை வைத்துக்கொள்ள வேண்டும்.



இந்த நாவலை எழுதிய பைரப்பா அவர்கள் தனக்கென்று எந்த விதமான கட்டாயமும் வைத்துக் கொள்ளவில்லை. இவர்கள் நல்லவர்கள் அவர்கள் கெட்டவர்கள் என்று யாரையும் பாகுபடுத்திக் காட்ட வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கவில்லை. முழுமையான சுதந்திரத்தோடு இந்த நாவலை எழுதியுள்ளார்.



குறிப்பா ஒரு பத்து பதினைந்து கதாபாத்திரங்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவர்களுடைய நினைவில் கதை நிகழ்வதுபோல எழுதியிருக்கிறார். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு துளி விஷமாவது இருக்கும்  அந்த விஷம் தான் எடுத்துக்கொண்ட கதாபாத்திரங்களில் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை பாரபட்சமில்லாமல் எழுதியிருக்கிறார்.



முதலில் ஒரு நான்கைந்து பக்கங்களை எதேச்சையாகத்தான் படிக்க ஆரம்பித்தேன் ஓரிடத்தில் துரியோதனின் பிறப்பு பற்றிய ஒரு கேள்வியும் ஆச்சரியப்படுத்தும் பதிலும் வருகிறது அங்கு ஆரம்பிக்கும் சுவாரசியம் புத்தகத்தின் இறுதிப் பக்கம் வரை தொடர்கிறது. பலவிதமான மகாபாரத கதைகளை படித்திருந்தாலும் பைரப்பா அவர்கள் அவருடைய கதாபாத்திரங்களின் வாயிலாக எழுப்பும் கேள்விகள் நாம் படித்துக் கொண்டிருப்பது ஒரு புதுவிதமான மகாபாரத கதை என்பதை உணர்த்துகிறது.



கதையில் ஆழத்திற்கு செல்லாமல் கதாபாத்திரங்களின் உணர்வுகளோடு விளையாடி இருக்கிறார். போர் காட்சிகள் உட்பட எதுவுமே விரிவாக எழுதப்படவில்லை. நடந்து முடிந்த நிகழ்ச்சிகளின் விளைவாக அந்த கதாபாத்திரங்கள் எவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் கொண்டது என்பதற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து எழுதியிருக்கிறார். புத்தகப் பிரியர்கள் கண்டிப்பாக வாங்கி வைத்திருக்க வேண்டிய புத்தகம் இது.


No comments: