Sunday, December 2, 2018

பைரப்பா எழுதிய இந்த பருவம் நாவலை பத்தி சொல்லணும்னா இது ஒரு முழுமையான மகாபாரத கதை அல்ல இந்த நாவலை படிப்பதன் மூலமாக யாரும் மகாபாரத கதையை தெரிந்து கொள்ள முடியாது ஏற்கனவே மகாபாரத கதையை படித்தவர்கள் படிக்க வேண்டிய புத்தகம் இது. அவர்களும் கடைசி வாய்ப்பாக இந்த நாவலை வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில்  இது ஒரு உச்சகட்டமான நாவல் ஆரம்பத்திலேயே இதை படித்து விட்டால் அதன் மூலம் ஏற்படும் தர்க்க புத்தி ஆரம்பகட்ட மகாபாரதக்கதை புத்தகங்களுக்கும், பருவம் போன்ற உச்சகட்டமான புத்தகத்திற்கும் இடைப்பட்ட நாவல்களை ரசித்துப் படிக்க முடியாமல் செய்துவிடும். எனவே மகாபாரதம் தொடர்பாக படிக்கவேண்டிய புத்தகப் பட்டியலில் இறுதி தேர்வாக இந்த பருவம் நாவலை வைத்துக்கொள்ள வேண்டும்.



இந்த நாவலை எழுதிய பைரப்பா அவர்கள் தனக்கென்று எந்த விதமான கட்டாயமும் வைத்துக் கொள்ளவில்லை. இவர்கள் நல்லவர்கள் அவர்கள் கெட்டவர்கள் என்று யாரையும் பாகுபடுத்திக் காட்ட வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கவில்லை. முழுமையான சுதந்திரத்தோடு இந்த நாவலை எழுதியுள்ளார்.



குறிப்பா ஒரு பத்து பதினைந்து கதாபாத்திரங்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவர்களுடைய நினைவில் கதை நிகழ்வதுபோல எழுதியிருக்கிறார். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு துளி விஷமாவது இருக்கும்  அந்த விஷம் தான் எடுத்துக்கொண்ட கதாபாத்திரங்களில் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை பாரபட்சமில்லாமல் எழுதியிருக்கிறார்.



முதலில் ஒரு நான்கைந்து பக்கங்களை எதேச்சையாகத்தான் படிக்க ஆரம்பித்தேன் ஓரிடத்தில் துரியோதனின் பிறப்பு பற்றிய ஒரு கேள்வியும் ஆச்சரியப்படுத்தும் பதிலும் வருகிறது அங்கு ஆரம்பிக்கும் சுவாரசியம் புத்தகத்தின் இறுதிப் பக்கம் வரை தொடர்கிறது. பலவிதமான மகாபாரத கதைகளை படித்திருந்தாலும் பைரப்பா அவர்கள் அவருடைய கதாபாத்திரங்களின் வாயிலாக எழுப்பும் கேள்விகள் நாம் படித்துக் கொண்டிருப்பது ஒரு புதுவிதமான மகாபாரத கதை என்பதை உணர்த்துகிறது.



கதையில் ஆழத்திற்கு செல்லாமல் கதாபாத்திரங்களின் உணர்வுகளோடு விளையாடி இருக்கிறார். போர் காட்சிகள் உட்பட எதுவுமே விரிவாக எழுதப்படவில்லை. நடந்து முடிந்த நிகழ்ச்சிகளின் விளைவாக அந்த கதாபாத்திரங்கள் எவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் கொண்டது என்பதற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து எழுதியிருக்கிறார். புத்தகப் பிரியர்கள் கண்டிப்பாக வாங்கி வைத்திருக்க வேண்டிய புத்தகம் இது.



பைரப்பா அவர்கள் எழுதிய நாவலுக்கு முன்பாக படிக்க வேண்டிய நாவல் இது. காரணம் பருவம் போன்ற ஒரு உச்சகட்டமான நாவலை வாசித்த பிறகு மற்ற நாவல்களை வாசிக்கையில் தானாகவே சுவாரசியம் குறைந்துவிடும். இந்த நாவலும் பருவம் போன்ற ஒரு முக்கியமான நாவல்தான் ஆனால் பருவம் நாவலை வாசித்துவிட்டு இந்த நாவலை வாசிக்கும்போது  பெரும்பாலான விஷயங்கள் சுவாரசியம் இல்லாமல் போய்விடுகிறது எனவே பருவம் நாவலுக்கு முன்பாக இதை வாசிக்க வேண்டும்.
பைரப்பா அவர்கள் எந்த வித கட்டாயமும் இல்லாமல் எழுதியதால் அவரால் நாவலில் தொடக்கத்திலேயே உச்சகட்டமான ஒரு உணர்வு எழுச்சியுடன் எழுத முடிந்தது. ஆனால் இந்த அஜயா நாவலின் ஆசிரியர் ஆரம்பத்திலேயே தன்னுடைய நோக்கத்தை சொல்லிவிடுகிறார் இது துரியோதனனை கதாநாயகனாககொண்ட நாவல். எனவே எதனால் நான் துரியோதனனை நல்லவனாக காட்டுகிறேன் என்று ஆசிரியர் நமக்கு விளக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி விடுகிறார். அந்த கட்டாயத்தினால் ஒவ்வொரு விஷயமாக விளக்கி சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகிறது. எனவே எடுத்த உடனேயே கதை பரபரப்பாக நகராமல் மெதுவாகவே நகர்கிறது.
மகாபாரதத்தின் மையக் கதையை தொடாமல் ஏகலைவன், ஜரா, கர்ணன், துரியோதனன் போன்ற நான்கு கதாபாத்திரங்கள் எவ்வாறு தன்னை வடிவமைத்துக் கொண்டன என்பதை மட்டுமே இந்த நாவலில் விளக்கியிருக்கிறார். இந்த நாவல் மகாபாரதக் கதையின் மையத்தை தொடும்போது முடிந்துவிடுகிறது. எனவே முக்கியமான கதை என்பது இரண்டாவது பகுதியில் இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஆரம்பத்தில் துரியோதனனை நல்லவனாக சித்தரித்து ஆசிரியர் எழுதும்போது தான் எடுத்துக்கொண்ட தலைப்பிற்கு கட்டுப்பட்டு எழுதுகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் மெல்ல மெல்ல அந்த எண்ணம் மாறி விடுகிறது ஆசிரியர் சொன்ன விஷயத்தை எடுத்துக் கொண்டு மற்ற மகாபாரதக் கதைகளில் துரியோதனன் எவ்வாறு நடந்து கொண்டிருக்கிறான் என்று ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஆசிரியர் சொல்வதை ஏற்றுக் கொள்ளத் தோன்றுகிறது மேலும் ஜெயமோகன் அவர்கள் எழுதிக்கொண்டிருக்கும் வெண்முரசில் சகுனி ஒரு எதிர்மறையான கதாபாத்திரமாக இருந்தாலும் அவர் கிடைக்கின்ற அனைத்து சந்தர்ப்பங்களையும் சூழ்ச்சி செய்ய பயன்படுத்தி கொண்டவராக காட்டப்படவில்லை ஆனால் இதில் கிருஷ்ணனும் சகுனியும் மிகத் தேர்ந்த அரசியல்வாதியாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் கிடைக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளையும் தங்களுடைய சூழ்ச்சிக்கு உட்படுத்திக் கொள்கிறார்கள்.

முக்கியமான கதாபாத்திரங்களை தவிர்த்தது என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரம் அஸ்வத்தாமன்தான். அவன் எப்பொழுதும் துரியோதனனுடன் இருந்துகொண்டு ஒவ்வொரு சூழ்நிலையையும் விளையாட்டாக சிரித்துக்கொண்டே கருத்து சொல்லிக் கொண்டே வருவது நம் அருகே ஒரு நண்பன் அமர்ந்து நம்முடன் பேசிக் கொண்டிருப்பது போல ஒரு உணர்வை தருகிறது. இந்த புத்தகத்தில் அஸ்வத்தாமனுக்கு  முக்கியத்துவம் இல்லாவிட்டாலும் புத்தகத்தை படித்து முடித்ததும் அவன் நினைவில் தங்கி இருக்கிறான்.

முதல் பகுதியை பாகுபலி படத்தைப் போல சட்டென்று முடித்திருக்கிறார். யாதவர்களுக்கும் நிஷாதர்களுக்கும்  போர் தொடங்குகிறது, நீண்ட நாளைக்கு பிறகு விழித்துக்கொண்ட பரசுராமர் எங்கே கர்ணன் என்று கேட்க அவனைத் தேடும் படலம் தொடங்குகிறது, திரௌபதியை சபைக்கு அழைத்துச் செல்ல வந்தவனால் கதவு தட்டப்படுகிறது, இந்த மூன்று நிகழ்வுகளையும் சொல்லிவிட்டு நாவலை முடித்து விடுகிறார். எனவே இதன் இரண்டாம் பகுதியான கலி யுகத்தின் தொடக்கம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.


Friday, January 27, 2012

உள்ளத்தில் குழந்தை

உலக இலக்கியங்களை காணும் போதெல்லாம் நமக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை என்று விலகிவிடுவது என் வழக்கம். ஆர்வமிகுதியால் அவ்வப்போது சில புத்தகங்களை படிக்க ஆரம்பித்து பின்னர் கைவிட்டது பல முறை நிகழ்ந்திருக்கிறது. ஆனாலும் அப்படி அவற்றில் என்னதான் இருக்கிறது அது ஏன் நமக்கு மட்டும் புரியாமல் இருக்கிறது ஒரு முறையாவது ஒரு புத்தகத்தை முழுமையாக படித்துவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மனதில் இருந்துகொண்டே இருந்தது.

”உள்ளத்தில் குழந்தை” இந்த புத்தகத்தை படித்துவிடலாம் என்று துணிவு ஏற்பட முக்கிய காரணம் புத்தகத்தின் அளவு. மிகவும் சிறிய நூல்தான். சரி இந்த முறை ஒரு உலக இலக்கியத்தை படித்துவிட வேண்டியதுதான் என்று ஆரம்பித்ததும் முதல் பத்து பக்கங்கள் வரை புரியாத பெயர்கள், புரியாத சூழல்கள் என ஒன்றுமே புரியவில்லை... விடாபிடியாக தொடர்ந்து படிக்க படிக்க ஏன் இந்த புத்தகத்தை மொழி பெயர்த்திருக்கிறார்கள் என்ற காரணம் புரிந்தது. மிகவும் எளிமையான, அழகான கதை. கொஞ்சம் ஆர்வம் மட்டும் இருந்தால் போது உங்களை தன் போக்கில் இழுத்துச்சென்றுவிடக்கூடிய அற்புதமான வர்ணனைகளுடன் கதை நகர்கிறது.

வெளிநாடு செல்லும் ஒருவன் அங்கு சந்திக்கும் ஒரு அண்ணன் மற்றும் அவருடைய தங்கை என மூன்று பேர்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு இயங்கும் கதை. மூன்று பேரின் உணர்வுகளை மட்டுமே கதையின் போக்காக செல்கிறது. இத்தனைக்கும் இது ஒரு காதல் கதை கூட இல்லை. காதலிக்கலாமா வேண்டாமா என அந்த கதாபாத்திரம் முடிவு எடுப்பதே கதையின் இறுதியாக இருக்கிறதே தவிர, காதலை பக்கம் பக்கமாக விளக்கும் கதை இல்லை இது. காதலும் இல்லை, நட்பும் இல்லை, விரோதமும் இல்லை, ஏதோ ஒன்றை தேடிச்செல்லும் நடவடிக்கைகளும் இல்லை பின்னே நாவலி என்னதான் இருக்கிறது! உணர்வுகள் அதை நீங்கள் இந்த புத்தகத்தை படிக்கும் போது உணர்ந்துகொள்வீர்கள்.



புத்தகத்தின் பெயர் : உள்ளத்தில் குழந்தை

ஆசிரியர் : இவான் துர்கேனிவ்

தமிழாக்கம் : தஸ்லிமா

வெளியீடு : சாஹித் @ ஹாமித் பப்லிஷர்ஸ்

Friday, April 2, 2010

கொஞ்ச நாட்களுக்கு முன்புவரை நோய்கள் பற்றிய ஒரு தெளிவான சிந்தனை அனைவரிடமும் இருந்தது. எனக்கு இரண்டு நாட்களாக ஒரே தலைவலி மருத்துவரிடம் செல்ல வேண்டும். ஒரு வாரமாக வயிற்று வலிக்கிறது, என்ன செய்தால் குணமாகும்... என்பது போன்ற பேச்சுக்கள்தான் இருந்தது. ஆனால் சமீபகாலமாக இந்த பேச்சுக்களை முற்றிலும் மாறிவிட்டது. என்னென்னே தெரியல இரண்டு நாட்களாக உடம்பு சரியில்லாததுபோல் இருக்கிறது மருத்துவரிடம் செல்ல வேண்டும். அந்த பையனுக்கு என்ன உடம்புக்கு – தெரியல அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது மருத்துவரிடம் செல்ல வேண்டும்.... இப்படி மாறிவிட்டது மக்களின் நோய்பற்றிய பேச்சுகள். அதாவது முன்பு தனக்கு என்ன நோய் ஏற்பட்டுள்ளது என்ற தெளிவான சிந்தனை மக்களிடம் இருந்தது. இப்போது தனக்கு என்ன விதமான நோய் ஏற்பட்டுள்ளது என்று யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை இதனால் மருத்துவர் சொல்வதை அப்படியே தலையாட்டி கேட்க வேண்டிய நிலை உருவாகிவிட்டது.

சமீபத்தில் என்னுடன் பணியாற்றுபவரின் இரண்டு சிறு வயது குழந்தைகளை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்திருந்தார்கள். இரண்டுவார காலம் அவசரசிகிச்சை பிரிவிலேயே வைத்திருந்துவிட்டு வீட்டுக்கு அனுப்பினார்கள். என்ன விசயம் என்று விசாரித்ததில் – நல்லாதான் இரண்டு பேரும் விளையாடிக்கொண்டு இருந்தார்கள் லேசாக தலை சுடுவதுபோல் இருந்தது, சரி காய்ச்சல் வந்திருக்குமோ என்ற சந்தேகத்தில் மருத்துவரிடம் அழைத்துச்சென்றேன். உடனடியாக அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்க வேண்டும் என்று சொல்லி சிகிச்சையை ஆரம்பித்துவிட்டார்கள். என்ன நோய் என்று கேட்டபோது ஏதோ வைரஸ் காய்ச்சல் என்று சொன்னார்கள்... இப்போதைய நிலமை இப்படித்தான் இருக்கிறது சாதாரணமான தலைவலி, வயிற்றுவலி என்று சொல்லிக்கொண்டு யாரும் மருத்துவரிடம் செல்வதில்லை தங்களுக்கு என்ன நோய் வந்தாலும் அந்த நோயின் பெயருடன் வைரஸ் என்ற வார்த்தையை இணைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் இப்போது உண்டாகிவிட்டது.

இப்போதைய சூழ்நிலையில் வைரஸ் நோய் பற்றி நாம் அறிந்து வைத்திருக்க வேண்டியது மிக அவசியமான ஒன்று. அந்த அவசியத்தை பூர்த்தி செய்யும் விதமான புத்தகம் இது. இந்த புத்தகத்தில் ஒருவரை பற்றி நமக்கு அறிமுகப்படுத்தும் விதத்தில் ஒவ்வொரு வைரஸ் பற்றியும் ஆசிரியர் நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கின்றார். பல வைரஸ்களின் பெயர்கள் நமக்கு புதிதாகவும், புரியாததாகவும் உள்ளது. ஏதோ ஒரு அறிவியல் பாடப் புத்தகத்தை படிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இந்த வைரஸின் பெயர் இது, இது இப்படித் தோண்றும், இப்படி வளர்ச்சியடையும், இது போன்ற பாதிப்புகளை உண்டாக்கும், அதில் இருந்து நாம் நம்மை தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்... இந்த முறையை அடிப்படையாக வைத்தே அனைத்து வைரஸ்கள் பற்றியும் எழுதியிருக்கிறார் ஆசிரியர். இப்படி பாட புத்தக வடிவில் இல்லாமல் நடைமுறை வாழ்வியல் தொடர்பான பிரச்சனைகளுடன் இணைத்து சுவாரஸ்யமாக எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

பல வைரஸ்களின் பெயர்கள் நமக்கு புரியாவிட்டாலும் ஒரு சில வைரஸ்கள் நமக்கு முன்பே அறிமுகமானவைதான். உதாரணமாக அம்மை நோய்களை உண்டாக்கும் வைரஸ் பற்றி படிக்கும் போது பல விசயங்களை தெரிந்துகொள்ள முடிகிறது. அம்மை நோய் என்றது வேப்பிலை, மாரியம்மன் கோவில், வாசலில் ஒரு குடத்தில் வேப்பிலையோடு வைத்திருந்து குளிக்கப்பயன்படுத்தும் தண்ணீர் போன்றவைகள்தான் நமக்குத்தெரியும். ஆனால் அவற்றின் அடிப்படை விசயங்களில் இருந்து முழுமையான ஒரு விபரத்தை இந்த புத்தகத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.

மற்றொரு நோய் போலியோ, போலியோ என்றதும் எனக்கு ஞாபகம் வருவது முன்பு கருப்பு வெள்ளை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த காலத்தில், சினிமாவிற்கு இடையே போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காண்பிப்பார்கள். கால்களில் செயற்கையாக சில விசயங்களை பொருத்திக்கொண்டு நடக்க முடியாமல் குழந்தைகள் நடந்து வருவார்கள் அவர்களை அரவணைத்துக்கொண்டு ரஜினிகாந்த் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டிய அவசியம் பற்றி பேசுவார். போலியோ பற்றி நான் அறிந்து வைத்திருக்கும் விசயம் அவ்வளவுதான். இந்த புத்தகத்தின் மூலமாக போலியோ பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள முடிந்தது. அதுபோல் தான் எய்ட்ஸ் பற்றிய விபரங்களும். எய்ட்ஸ் நோயாளிகளும் நம்மைபோன்றவர்கள்தான் அவர்களை நாம் ஒதுக்கக்கூடாது, கைகளை தொடுவதால், அவர்களுடன் பழகுவதால் நமக்கு நோய் பரவாது என்று தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டாலும் நமக்கு ஒரு அச்சம் இருக்கத்தான் செய்கிறது. இந்த புத்தத்தில் எய்ட்ஸ் பற்றி காரண காரியங்களோடு படிக்குக்கும்போது அந்த அச்சம் நம் மனதிலிருந்து விலகிவிடுகிறது

பல நோய்களை பற்றி படித்தாலும் அவற்றால் எனக்கு பாதிப்பு ஏற்படாததால் அவற்றின் அர்த்தங்கள் புரியவில்லை. ஆனால் சிக்குன் குன்யா பற்றி படிக்கின்றபோது மிகுந்த ஆர்வத்துடன் படித்தேன் ஏனெனில் இரண்டு முறை சிக்குன் குன்யாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றேன். சிக்குன் குன்யா வராமல் இருக்க இந்த ஊசியை போட்டுக்கொள்ளுங்கள், எங்களின் இயற்கையான இந்த மருந்துகளை பயன்படுத்தினால் சிக்குன் குன்யா வராமல் தடுக்க முடியும் என்பது போன்ற பல விளம்பர பலகைகளை நான் பார்த்திருக்கின்றேன். சிக்குன் குன்யா பற்றிய விபரம் என்றது நான் தேடியது, இந்த நோய்யை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றித்தான். ஆனால் இந்த நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை இந்த புத்தகத்தின் மூலமாக தெரிந்துகொண்டேன். இந்த விசயம் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. மருத்துவர்கள் இதுவரை கொடுத்துக்கொண்டிருப்பது இந்த நோயினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய மட்டுமே பயன்படுமாம்.

இந்த புத்தகத்தில் மிக முக்கியமானது முதலாவது அத்தியாயமான வைரஸ் பற்றிய அறிமுகமும், எந்தெந்த நேரங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்ற ஆலோசனைகள் அடங்கிய இறுதி அத்தியாயமும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான பகுதிகள் ஆகும். மற்ற விபரங்கள் பலவிதமான வைரஸ்கள் பற்றிய அறிமுகம் மட்டுமே. இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க இங்கே செல்லுங்கள்: http://nhm.in/shop/978-81-8493-109-9.html

Tuesday, March 2, 2010

மருதமலைக்கு மிக அருகில் வசித்த சமயத்தில் அடிக்கடி மருதமலைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் மருதமலைக்கு செல்வது தொடர்பாக யாராவது சந்தேகம் கேட்டால் விபரமாக சொல்லிவிடுவேன். இதனால் மருதமலை பற்றி எல்லா விசயங்களும் எனக்கு தெரியும் என்ற நினைப்பில் இருந்தேன். சமீபத்தில் மருதமலை தொடர்பாக இணைய தளத்தில் செய்திகளை படித்துக் கொண்டிருந்தபோது, மருதமலை என பெயர் வரக் காரணம் என்ன என தெரிந்தபோது மிக ஆச்சரியமாக இருந்தது! மருத மரங்கள் அங்கிருப்பதால் மருதமலை என பெயர் வந்ததாம். பல முறை அங்கு நான் போயிருந்தாலும் ஒருதடவை கூட மருத மரங்களை பார்த்ததில்லை. இதன் மூலமாக நான் தெரிந்து கொண்டது என்னவென்றால் ஒரு இடத்திற்கு பல முறை சென்றிருந்தாலும், அந்த இடத்தைப் பற்றி முழுமையாக நம்மால் தெரிந்துகொள்ள இயலாது. எனவே ஒரு இடத்திற்கு செல்வதற்கு முன்பாக அந்த இடத்தைப் பற்றிய சிறப்புகளை கொஞ்சமாவது படித்துவிட்டு சென்றால் நம் பயணம் முழுமையடையும். எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவம் மருதமலைக்கு செல்வதில் மட்டுமல்ல சென்னைக்கு செல்வதற்கும் பொருந்தும்.

புத்தக்தை படித்துக்கொண்டிருக்கும் போதே ஆசிரியர் நந்திதா கிருஷ்ணா நம்முடைய நினைவிற்கு நிஞ்சயம் வருவார். காரணம் இந்த புத்தகத்தில் அவர் எழுதியிருப்பது அவருடைய சொந்த கருத்துக்களோ, கற்பனையான விசயங்களோ அல்ல, என்ன உள்ளதோ அதை அப்படியே எழுதியிருக்கிறார். அதைத் தவிர அதிகப்படியாக வேறு எதையும் எழுதவில்லை. ஒரு ஆய்வறிக்கையை படிப்பதுபோல புள்ளி விபரங்களுடன் மிகத்தெளிவாக எழுதியிருக்கிறார். இவ்வளவு விசயங்களை உண்மையாக தெரிந்துகொள்ளாமல் எழுத இயலாதே! இதற்காக ஆசிரியர் ஒரு ஆராய்சியே செய்திருப்பார் என்று நினைத்துகொண்டு கடைசி பக்கத்தை பார்த்தால் உண்மையிலேயே ஆசிரியர் ஒரு ஆய்வாளரே என்ற செய்தி ஆச்சரியப்படுத்துகிறது. உதாரணமாக கூவம் நதி பற்றி எழுதும்போது அதையொட்டி அமைந்துள்ள சிவன் கோவில் ஆவணம் பற்றி ஆசிரியர் சொல்லி அதன் மூலமாக கூவம் நதியை பற்றி விளக்கியிருபதில் ஆசிரியரின் ஆய்வு பற்றி புரிகிறது. 25 ரூபாய் புத்தத்தில் அந்த தொகையைவீட அதிகமாகவே உழைப்பு இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

சென்னை வெய்யிலில் கடுப்பாகிய ஒருவன் கண்களை மூடி அமர்ந்து, சென்னை எப்படி இருக்க வேண்டும் என்று கற்பனை செய்தால், அந்த கற்பனையில் என்னென்ன காட்சிகள் வருமோ அப்படித்தான் ஆரம்பத்தில் சென்னை இருந்ததாம்! சாலையின் இருபுறமும் மரங்கள் இருந்தனவாம், பலவிதமான தோப்புகள் இருந்தனவாம், நாம் எவ்வளவு அழிவுகளை ஏற்படுத்தி விட்டோம் என்பதை உணர முடிகிறது. வெரும் வியாபார சிந்தனை மட்டும் மேலோங்கி இருந்தால் ஒரு நகரம் என்ன நிலையை அடையும் என்பதை தெளிவாக உணர முடிகிறது.

புத்தகத்தில் இதுவரை நான் அறிந்திராத பல பொது அறிவு விசயங்களையும் ஆசிரியர் சம்பந்தப்பட்ட இடங்களில் எழுதியிருக்கிறார். அதை படிப்பதற்கு புதுமையாக இருந்தது. நமது மாநில மரம், மாநில மலர், மாநில விலங்கு, மாநில பறவை என பலவிதமான பொது அறிவு விசயங்களும் புத்தகத்தில் உண்டு.

சென்னையின் வியர்வையிலும், புழுதியிலும் அதன் வரலாறு மறைந்து விட்டது அல்லது அவற்றை மக்கள் மறந்துவிட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். சென்னை இவ்வளவு வரலாற்று சிறப்பு மிக்க நகரமா! என ஆச்சரியம் உண்டாகிறது. சென்னையில் உள்ள ஒவ்வொரு விசயத்திற்கும் ஒரு வரலாற்று அர்த்தம் இருக்கிறது என்பதை ஆசிரியர் ஆணித்தரமான விசயங்களால் விளக்கும் போது வியப்பு உண்டாகிறது.

ஏதோ ஒரு கோவிலுக்கு சென்றோம் சாமியை கும்பிட்டோம் என்ற சிந்தனைதான் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். ஆனால் ஒரு ஊரில் கோவில் எதற்கு இருக்கிறது அதனால் அந்த ஊருக்கு என்ன நன்மை என்பதை அறிவியல் பூர்வமாக ஆசிரியர் விளக்கியிருப்பது அருமையாக உள்ளது. பழங்கால மக்களின் அறிவை எண்ணி ஆச்சரியப்படாமல் இருக்க இயலாது. ஒரு கோவில், அதற்கு ஒரு குளம், அந்த குளம் நோக்கியபடி அந்த ஊரில் உள்ள வீடுகளின் மேற்கூறை அமைந்திருக்கும் இதன் மூலமாக மழை நீர் முழுவதும் அந்த குளத்தில் சேருகிறது. இதனால் அந்த ஊரில் உள்ள அனைத்து கிணறுகளிலும் தண்ணீர் அதிகரிக்கிறது. ஊரில் நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது... என்று ஆசிரியர் சொல்லிக்கொண்டேபோக அந்த காலத்து மக்கள் அர்த்தமில்லாமல் எதுவும் செய்ய வில்லை என்று புரிகிறது. மேலும் நம்மால் நாகரீகம் என்ற பெயரில் கட்டிடங்களின் வடிவங்கள் மாற்றியமைக்கப்பட்டதும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் ஆசிரியர் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

வெரும் புலம்பலாக மட்டும் இல்லாமல் பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வையும் ஆசிரியர் சொல்லியிருப்பது புத்தகத்திற்கு மேலும் மதிப்பை அதிகரிக்கிறது. சரி எல்லாம் முடிந்து விட்டது இனி கவலைப்பட்டு எதுவும் ஆகப்போவதில்லை இனி என்ன செய்யலாம் என்ற நிலை வருகையில் கொஞ்ச நாள் பரபரப்பாக நம்மால் பேசப்பட்ட மழைநீர் சேகரிப்பை கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் அப்போதுதான் எதிர்கால பிரச்சனைகளை நம்மால் சமாளிக்க இயலும் என்று ஆசிரியர் சொல்லும் போது இது சென்னைக்கு மட்டுமல்ல அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும் என்ற எண்ணம் தோண்ருகிறது. புத்தகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் அந்த பகுதிக்கு பொருத்தமான அழகிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதன் மூலம் ஒவ்வொரு பகுதியில் சொல்லப்படும் விசயங்களை நம்மால் காட்சிப்படுத்தி பார்த்துக்கொள்ள முடிகிறது.

மிகக்குறைந்த விலையில் கிடைக்கும் இந்த புத்தகத்தில் மிக அதிகமான அறிய விசயங்கள் அடங்கியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அழகிய மற்றும் அர்த்தமுள்ள இந்த புத்தகத்தை வாங்க இங்கே செல்லுங்கள்: http://nhm.in/shop/978-81-8493-253-9.html

Sunday, February 7, 2010

இந்த புத்தகத்தில் படிப்பதற்கு என்ன இருக்கப்போகிறது! மாயாவதி பற்றி படித்து நாம் என்ன செய்யப்போகிறோம்! என்று நினைத்து இந்த புத்தகத்தை நீங்கள் படிக்காமல் விட்டு விட்டால், ஒரு விறுவிறுப்பான அரசியல் புத்தகத்தை படிப்பதற்கான வாய்ப்பை இழந்து விடுவீர்கள். அமைதிப் படை படத்தில் சத்தியராஜ் ஒரு வசனம் சொல்வாரே “நாம முன்னேறனும்னா நாயா இருந்தாலும் மனுசனா இருந்தாலும் ஏறி மிதித்துவிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியது தானே” இந்த புத்தகத்தின் கடைசியில் உள்ள சில அத்தியாயங்களை படிக்கும்போது நிஜ அரசியலும் அப்படித்தான் இருக்கிறது என்பது உங்களுக்கு புரியும். கொள்கைகள் கோட்பாடுகள் என்று எதுவுமில்லை இப்போதைய அரசியலில். காரியம் ஆக வேண்டும், அதற்காக என்ன செய்ய வேண்டும், யார் யாரிடம் பணிந்து போக வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டே நம் அரசியல் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பது தெளிவாக புரிகிறது.

ஒரு மிகச்சிறந்த சதுரங்க ஆட்டத்தை வேடிக்கைப்பார்த்தால் எவ்வளவு சுவாரசியமாக இருக்குமோ, அவ்வளவு சுவாரசியமாக இந்த அரசியல் சதுரங்கத்தை பற்றி எழுதியுள்ளார் ஆசிரியர். முதலில் வரும் நான்கு ஐந்து அத்தியாயங்கள் வழக்கமாக வரும் பிறப்பு, வளர்ப்பு பற்றியது. ஆனால் அதற்கு பின் அரசியல் ரீதியாக வரும் அத்தியாயங்கள் உண்மையிலேயே மிகவும் விறுவிறுப்பாக பல திருப்பங்களுடன் செல்கிறது.

முன்னேறியவர்களின் வாழ்க்கையை படிக்கும் போது ஒரு விசயம் புரிகிறது. சிறுவயதில் அவர்களை முன்னேறத் தூண்டும் வகையில் பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. ஆச்சரியப்படும் விதமாக அந்த சம்பவங்கள் நம் வாழ்விலும் நடந்திருக்கிறது. ஆனால் அவர்களுக்கும் நமக்கும் எங்கு வித்தியாசம் ஏற்படுகிறது என்றால், அந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் செயல் முறையையே மாற்றிக்கொண்டு விடுகிறார்கள். அதை ஒரு முக்கியமான நிகழ்வாக எடுத்துக்கொள்கிறார்கள். பெரும்பாலானவர்கள் அந்த நிகழ்வுகளை ஒரு சிறு பிரச்சனை என்ற அளவிலேயே அனுகி அதை அத்தோடு மறந்துவிடுகிறார்கள். மாயாவதியின் வாழ்விலும் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன ஆனால் அவை அனைத்து தலித்துகளின் வாழ்வில் நிகழ்ந்தவைதான். அந்த நிகழ்வுகளை மாயாவதி எப்படி அனுகியிருக்கிறார், அந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு தன்னுடைய வாழ்வை எப்படி மாற்றியிருக்கிறார் என்பதுதான் அவரின் முன்னேற்றத்திற்கு காரணமாக அமைந்திருக்கிறது.

ஒரு சிலருக்கு முன்னேறுவதற்கான அனைத்து விசயங்களும் சரியாக அமைந்தாலும் அவர்களை வழி நடத்த சரியான ஆள் இல்லாமல் தோல்வியடைந்துவிடுவார்கள். மாயாவதிக்கு அப்படியொரு நிகழ்வு நிகழவில்லை, காரணம் கன்ஷிராம் என்றோரு அருமையான குரு மாயாவதிக்கு அமைந்திருக்கிறார். பொதுவாக அரசியலில் வாரிசு போல இருப்பவர்கள், தங்களுடைய குருவை ஏதாவது ஒரு வகையில் மிஞ்சி விடுவார்கள். வளர்ந்த பிறகு திடிரென்று கட்சி மாறிவிடுவது அல்லது புதியதாக கட்சி ஆரம்பித்து தனக்கு அரசியல் சொல்லிக்கொடுத்தவரின் காலை வாரி விடுவது வழக்கம். ஆனால் கன்ஷிராம் விசயத்தில் அப்படி நடக்காததற்கு மாயாவதி மிக நல்லவர் என்று அர்த்தமில்லை, பிரம்மிக்க வைக்கும் கன்ஷிராமின் திட்டமிடல்தான் கடைசிவரை அவர் நிலை தடுமாறாமல் அரசியலில் இருக்க காரணமாக அமைந்திருக்கிறது. அவரை புரிந்துகொள்ள அவர் சொன்ன ஒரு வாக்கியமே போது “என் கனவுகள் மிகப் பெரியவை” .

தமிழ் நாட்டு அரசியலே பெரிய தலைவலியாக நினைத்துக்கொண்டிருக்கும் நமக்கு உத்திரப்பிரதேச அரசியல் நிலவரம் படிக்கும்போது நம்ம ஊர் அரசியல் பதட்டமெல்லாம் சாதாரண விசயம் என்று புரிகிறது. மாயாவதியை கன்ஷிராம் சந்தித்தது முதல் அவர்கள் சம்பந்தப்பட்ட விசயங்களை படிக்கும் போது, இப்படி இருக்க வாய்ப்பே இல்லையே மற்றவர்கள் சும்மா இருக்க மாட்டார்களே! ஏதாவது பிரச்சனையை உருவாக்குவார்களே! என சிந்தித்துக்கொண்டு படிக்கும்போதே அடுத்த அத்தியாயங்களில் வந்து விடுகிறது வழக்கமான பிரச்சனைகள். மாயாவதிக்கும் கன்ஷிராமுக்கும் உள்ள உறவு பற்றிய விமர்சனங்கள்... ஊர் மாறினாலும், அரசியல் மாறினாலும் மக்களின் பொதுவான சிந்தனை மாறாது என்பதற்கு இது ஓர் உதாரணம்.

”கோடிக்கணக்கில் பணம் செலவழித்து தனக்கு சிலை வைக்கிறார் மாயாவதி” என்ற செய்தியை படித்ததும், இப்போதுள்ள அரசியல்வாதிகளை தட்டிக்கேட்க ஆள் இல்லை எனவே அப்படித்தான் நடந்துகொள்வார்கள். அப்படி நடந்துகொண்டாலும் இந்த மக்களெல்லாம் அவர்களுக்குத்தானே ஓட்டு போடுகிறார்கள் – என்ற சிந்தனை நம் மனதில் எழுவது இயல்பு. இப்படி யோசிக்கும் நாம் மாயாவதியை பற்றி ஏதாவது தெரிந்து வைத்திருக்கிறோமா! என்று யோசித்தால் அந்த கேள்விக்கு நம்மிடம் பதில் இருக்காது. மாயாவதியை பற்றி மட்டுமல்ல இந்தியாவில் தற்போதுள்ள எந்த அரசியல்வாதியை பற்றியும் முழுமையாக நமக்கு தெரியாது என்பதுதான் உண்மை. அப்படி அவர்களை பற்றி நாம் முழுமையாக தெரிந்து கொண்டால், அவர்களின் சூழ்நிலையை புரிந்துகொண்டால், அவர்களின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்வோமா! அல்லது இப்போதுள்ள அளவிற்கு கடுமையான விமர்சனங்கள் இருக்குமா! என்றால் அதில் சந்தேகமே. மாயாவதி புத்தகத்தை படித்ததும் எனக்கு அப்படித்தான் தோண்றுகிறது.

அரசியலை பொருத்த வரையில் எங்கு எது நடந்தாலும் அனைத்து அரசியல்வாதிகளையும் அந்த விசயம் பாதிக்கும் என்பதை மாயாவதியின் வாழ்க்கையின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, பாபர் மசூதி போன்ற விசயங்கள் மாயாவதியின் வாழ்வில் ஏற்றமும், இறக்கமும் ஏற்பட முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

பொதுவாக ஒருவரைப் பற்றி எழுதும்போது அவரைப் பற்றிய தவறான விசயங்கள் நாசுக்காக சொல்லப்பட்டு, நல்ல விசயங்கள் புத்தகம் முழுவதும் நிறைந்திருக்கும். ஆனால் இந்த புத்தகத்தில் மாயாவதியின் நேர்மறையான மற்றும் எதிர்மறையான விசயங்களை ஆசிரியர் சம அளவில் வெளிப்படையாக எழுதியிருப்பது பாரட்டத்தக்கது.

இந்த புத்தகத்தை படித்து முடித்ததும் மாயாவதியை பற்றி மட்டுமல்ல மற்ற அனைத்து அரசியல்வாதிகளை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது. வெறுமனே அவர்களை பற்றி விமர்சனம் மட்டும் செய்து கொண்டிருக்காமல், அவர்களை பற்றி கொஞ்சமாவது தெரிந்துகொண்டு விமர்சனம் செய்வது நல்லது என்று நினைக்கிறேன். இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க இந்த முகவரிக்கு செல்லுங்கள் URL: http://nhm.in/shop/978-81-8493-185-3.html

Monday, December 14, 2009

சிப்பாய் புரட்சி பற்றி தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் எந்தவித யோசனையும் செய்யாமல் துணிந்து வாங்கலாம் இந்த புத்தகத்தை. ஒவ்வொரு பக்கத்திலும் பிரச்சனையை அடிப்படையாகக்கொண்ட இந்த புத்தகத்தை குழப்பம் இல்லாமல் எழுதிய ஆசிரியர் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவரே.

அவனுக்கென்ன ராஜ வாழ்க்கை என்று நாம் பேசிக்கொள்வது வழக்கம். உதவித்தொகை வாங்கி பிழைப்பு நடத்தும் இந்த காலத்து முதியவர்கள் போல அந்த காலத்து ராஜாக்கள் ஆங்கிலேயரிடம் இந்த மாதம் இவ்வளவு தொகை எங்களுக்கு கொடுத்தால் பரவாயில்லை என கெஞ்சி கேட்டு பிழைப்பு நடத்தியதை இந்த புத்தகத்தில் படித்த பிறகு ராஜ வாழ்க்கையின் உண்மை நிலை புரிகிறது.

சில நிறுவனங்களில் பணியாளர்களிடம் அனைத்து பொருப்புகளையும் கொடுத்துவிட்டு, பணம் எவ்வளவு வருகிறது என்பதில் மட்டுமே முதலாளிகள் கவணம் செலுத்திக்கொண்டிருப்பார்கள். சில வருடங்கள் கழித்து அந்த பணியாளன் யோசித்துப்பார்ப்பான். நான் தான் வேலை செய்கிறேன், எனக்குதான் அனைத்து விசயங்களும் தெரிகிறது, பணம் மட்டும் முதலாளிக்கு போகிறது! இந்த தொழிலை ஏன் நான் தனியாக செய்யக்கூடாது என்று யோசித்து அந்த முதலாளியிடமிருந்து விலகிச்சென்றுவிடுவான். அதற்குப்பிறகு அந்த முதலாளி தன்னுடைய ஊழியன் இப்படி துரோம் செய்துவிட்டானே என புலம்பத்தொடங்குவார். அப்படித்தான் நடந்துள்ளது ஆங்கியேலர் நம் மண்ணை ஆக்கிரமித்தது. ஆங்கிலேயர்கள் நம் மண்ணில் அத்துமீறி ஆதிக்கம் செலுத்தியதாக மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கும் நாம் அப்போதிருந்த சூழ்நிலையைப்பற்றி பேசுவதில்லை. நாம் பேசாமல் விட்ட அந்த விசயத்தை இந்த புத்தகம் பேசுகிறது. வாகணத்தை பூட்டாமல் சாலையோரம் நிருத்திவிட்டு காணாமல் போய்விட்டதென்று சிலர் பொருப்பில்லாமல் புலம்புவார்களே அவர்களைப்போல்தான் நம் நாட்டைச்சார்ந்த மன்னர்கள் செயல்பட்டுள்ளார்கள். வரும் மாணியத்தை வாங்கிக்கொண்டு சோம்பேரித்தனமாக எந்த வேலையிலும் ஆர்வம் செலுத்தாமல் சுக வாழ்க்கையில் மட்டுமெ கவணம் செலுத்தியுள்ளார்கள் நம் மன்னர்கள். பாதுகாப்பு வேண்டுமா ஆங்கிலேயனை கூப்பிடு, அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டுமா வரி வசூல் செய்துகொள்ளச்சொல் என்பதையே வழக்கமாக கொண்டிருந்தவர்களிடம் யாராக இருந்தாலும் அத்துமீறியிருப்பார்கள் என்பதுதான் உண்மை.

சுதந்திரத்திற்கான போராட்டம் என்பது, வரலாறு புத்தகத்தில் படித்த ஒருசிலரின் வாழ்க்கையோடு முடிந்துவிடுவதில்லை என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. ஒவ்வொரு புத்தகத்தையும் வழிநடத்திச்செல்ல புத்தகத்தில் யாராவது ஒருவர் முன்னிலை படுத்தப்படுவது வழக்கம். இந்த புத்தகத்தில் அப்படியாரும் இல்லை. இது மங்கள்பாண்டே பற்றியா புத்தகமா! என ஆச்சரியத்துடன் படித்தால் அவரது சாகாப்தம் இரண்டு மூன்று பக்கங்களோடு முற்றுப்பெருகிறது. ஒரு வேலை ஜான்சி ராணி பற்றிய புத்தகமாக இருக்குமோ! என நினைத்தால் அவரும் அப்படியே. வேறு யார்தான் புத்தகத்தில் முன்னிலை படுத்தப்பட்டிருக்கிறார்க்ள்????? புரட்சி. ஆம் புரட்சிதான் இந்த புத்தகத்தை வழிநடத்துகிறது. முதல் பக்கத்திலிருந்து இறுதி பக்கம் வரை போராளிகள் வருகிறார்கள் போகிறார்கள் ஆனால் அவர்களின் மூலமாக புரட்சி மட்டும் ஏந்திய தீபமாக கொண்டு செல்லப்படுகிறது.

கட்டபொம்மன், புலித்தேவன் போன்றோர்கள் வெள்ளையர்களுடன் மோதியது அவர்களது சொந்தப்பிரச்சனைதானே அதெப்படி சுதந்திரப்போராகும் என்று சுதந்திரம் பற்றி பேச்சு வரும்போதெல்லாம் எனக்கு ஒரு சந்தேகம் தோண்றும். அந்த விசயத்தை ஆசிரியர் இந்த புத்தகத்தில் குறிப்பிட்டு அவற்றை ஏன் சுதந்திரப்போராக எடுத்துக்கொள்கிறோம் என்பதையும் விளக்கியுள்ளது சிறப்பு.

திருவாளர் பாம்பு அவர்களே என்று மரியாதையாக அழைத்தாலும் பாம்பு நம்மை கடிக்கும் என்று ஒரு பழமொழி உண்டு. இந்த பழமொழி அந்த காலத்து ராஜாக்கள் அறிந்திருக்கவில்லைபோலும். அநியாயத்திற்கு விசுவாசமாக இருந்துள்ளார்கள். ஒரு புறம் நீங்கள் நல்ல சாப்பாடு சாப்பிடுங்கள் எங்களுக்கு கஞ்சி போதும் என சிப்பாய்களாக இருந்த நம் மக்கள் கூறுகிறார்கள் என்றால் மறுபுறம் தான் சேமித்த பணத்தை ஆங்கிலேயருக்கே கொடுத்து உதவியிருக்கிறார் ஒரு ராஜா. அளவுக்கு மீறிய விசுவாசம், மரியாதை செலுத்த காரணம் என்ன? சிறு சிறு நாடுகள் ஒன்றின் மீது மற்றொன்றுக்கு பொறாமை, போட்டி, ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்ளும் முயற்சி ஆகியவற்றிற்கு ஆங்கிலேயர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அதனால்தான் முடிவு இரண்டு கரடிகளுகு பிரச்சனையை தீர்த்துவைக்க வந்த குரங்கு கதைபோல் ஆகிவிட்டது.

ஆங்கிலேயர், இந்தியர் என்ற சமாச்சாரங்களையெல்லாம் தாண்டி ஒருவர் நம்மை கவர்கிறார். அவர் கிளைவ். இரண்டு முறை தற்கொலை முயற்சி மேற்கொண்டு பிறகு போரிலாவது தன் உயிர் போகட்டும் என ரானுவத்தில் சேர்ந்தவராம்.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை தொழில் நுட்பத்துறை பிரபலமாக இருந்ததில்லையா அதுபோல அந்த காலத்தில் ஆங்கிலேயரின் ரானுவத்தில் பணியாற்றுவது மிகவும் விரும்பத்தக்க ஒரு தொழிலாகவும், பிரபலமான ஒரு தொழிலாகவும் கருதப்பட்டிருக்கிறது என்பது ஆச்சரியம் அளிக்கிறது. தகப்பன் மகன் பேரன் என ஆங்கிலப்படையில் பணியாற்றுவதை சந்தோஷமாக கருதியிருக்கிறார்கள். வரலாற்றில் ஒரு அழிவு ஏற்படுகிறது என்றாலே பெரும்பாலும் அங்கே ஒரு பெண் கதாபாத்திரம் இருக்கும். இங்கேயும் இருக்கிறார்கள். ஆங்கிலேயரின் மனைவிமார்கள் வடிவில். ஆசையாக பணிக்கு சென்ற நம்மவர்களுக்கும் ஆங்கிலேயருக்கும் முதல் பிரிவு ஏற்பட காரணமாக அமைந்திருக்கிறார்கள் ஆங்கிலேயரின் மனைவிகள்.

நம் நாட்டில் தற்போது நடக்கும் சில பிரச்சனைகள் படிக்கும் போது பயங்கரமாக இருக்கும். ஆந்திராவில் பிரச்சனை தமிழகத்தில் பிரச்சனை என படிக்கும்போது பெரிய பிரச்சனையாக தெரிகிறது. ஆனால் இந்த புத்தகத்தை படித்த பிறகு, அட இவ்வளவு காலம் நாம் ஒற்றுமையாக இருக்கிறோமே என்ற ஆச்சரியம்தான் மிஞ்சுகிறது. இந்து முஸ்லீம் பிரச்சனை, சீக்கியர் முஸ்லீம் பிரச்சனை என ஒருவருக்கொருவர் விரோதித்துக்கொண்டிருந்ததை படிக்கும்போது. இப்போது சில பிரச்சனைகள் ஏற்பட்டாலும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்றே தாராளமாக கருதலாம்.

புரட்சியில் நிகழ்ந்த வன்முறைக்காட்சிகளை ஆங்கிலப்படத்தில் பார்ப்பதுபோல அப்படியே விவரித்துள்ளார் ஆசிரியர். ஒரு வீட்டுக்குள் வைத்து கசாப்புக்காரர்களால் பெண்கள், குழந்தைகள் வெட்டி சாய்ப்பதாகட்டும், ஆங்கிலேயர்களை படகில் ஏற்றி வழியனுப்பிவிட்டு தப்பித்த ஒரு சிலரை தவிர அத்தனை பேரையும் அழித்து ஆற்றின் நிறத்தையே மாற்றியதாகட்டும், ஒவ்வொரு நிகழ்வுகளும் நம் கண்முன் நிருத்துகிறார் ஆசிரியர்.

காந்தியம் என்பது வறட்டு சித்தாந்தமில்லை என தமிழருவி மணியன் ஒரு கட்டுரையில் கூறியிருந்தார். அதன் அர்த்தம் அப்போது புரியவில்லை, இந்த புத்தகத்தை படித்ததும் புரிகிறது. ஒரு புரட்சியாளர், அவர் உருவாக்கிய படை, தேவையான ஆயுதங்கள் அவ்வளவுதான். ஒவ்வொருவரும் இதைக்கொண்டே போராடுகிறார்கள். ஒவ்வொரு போராட்டம் முடிந்ததும் ஒரு கேள்வி மிச்சமிருக்கிறது அனைவரிடமும் “அடுத்து என்ன செய்ய வேண்டும்” அது யாருக்கும் தெரியவில்லை. ஆட்களும் ஆயுதங்களும் போதும் என நினைத்ததால் ஒரு நூற்றாண்டு காலம் நாம் காத்திருக்க வேண்டியிருந்தது. அஹிம்சை என்றொரு காந்திய சிந்தனை தோண்றாமல் மீண்டும் புரட்சியாளர்கள், ஆயுதம் என நம் சிந்தனை சென்றிருந்தால் இன்னும் ஓர் நூற்றாண்டு நாம் காத்திருக்க வேண்டியிருந்திருக்கும். நல்ல வேலை நம் ஆயுதம் அஹிம்சையாக மாறியது. சிறப்பான இந்த புத்தகத்தை வாங்க நீங்கள் செல்ல வேண்டிய இடம் URL: http://nhm.in/shop/978-81-8493-116-7.html