Tuesday, July 14, 2009

ஒரு பத்திரிக்கை பேட்டியில் ஆண் எப்போது அழகு என்று ராதிகா அளித்த பேட்டியில் தனது தந்தைக்கு எழுத படிக்க தெரியாது ஆனால் படித்தவர்கள்கூட பேசாத பல விசயங்களை அவர் பேசுவார் அதன் ரகசியம், அதற்கென ஒரு ஆளை வேலைக்கு வைத்து தினமும் செய்தித்தாளில் வரும் அனைத்து விசயங்களையும் அறிந்துகொண்டு மற்றவர்களிடம் உரையாடுவார் என்று கூறியிருந்தார். தன்னிடமிருக்கும் குறைகளை குறையே இல்லாதவகையில் மற்றியமைத்துக்கொண்ட இந்த ஆச்சரியமான மனிதரைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன். இந்த புத்தகத்தின் மூலமாக அவரைப்பற்றி முழுமையாக அறிந்துகொள்ள முடிகிறது.

எம்.ஜி.யார், சிவாஜிக்கு எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை M.R.ராதா என்று தெரிந்தாலும், நடைபெற்ற பல நிகழ்வுகளால் அவரை கொண்டாடாமல் விட்டுவிட்டார்கள் இருந்தாலும் அதையும்மீறி இன்றளவும் M.R.ராதாவைப்பற்றி நாம் பேசிக்கொண்டிருக்க முக்கியக்காரணம் அவருடைய ஆளுமைப்பண்புகள் மற்றும் மனிதர்களை அவர் படித்திருந்த விதம். ஏதோ சினிமா நடிகரைப்பற்றி படிக்கிறோம் என்றில்லாமல் இந்த புத்தகத்தில் அவரின் அனுபவத்தின் வாயிலாக நாமும் கற்றுக்கொள்ள வேண்டிய பல விசயங்கள் உண்டு. ஒரு துறையில் புதிதாக நாம் நுழையும்போது யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை கதாநாயகனாக அறிமுகமாகப்போகும் அசோகனுக்கு M.R.ராதா சொல்லும் புத்திமதியிலேயே நாமும் புரிந்துகொள்ளலாம். அசோகன் அவர்களால் கதாநாயகனாக பிரகாசிக்க முடியாமல் போன காரணத்தை ஆரம்பத்திலேயே சொன்ன M.R.ராதாவின் அனுபவம் சிறப்புவாய்ந்தது.

M.R.ராதாவிடம் நாம் கற்றுகொள்ள வேண்டிய இரண்டு விசயங்கள் உள்ளன:

1. நம்முடைய குறைகள் என்னென்ன என்பதை முழுமையாக தெரிந்து கொண்டு அதை நிறைவான விசயங்களாக மற்றிக்கொள்வது. தனக்கு எழுதப்படிக்க தெரியாது இதனால் அன்றாட செய்திகளை அறிந்துகொள்ள முடியாது இதை ஒரு குறையாக கருதாமல் அதற்காக ஒரு நபரை நியமித்து செய்திகளை வாசித்துக்காட்ட சொல்லி செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொண்டு அதை நாடகத்திற்கு பயன்படுத்தியிருக்கிறார். சினிமாவில் தன்னால் என்ன செய்ய முடியும் என்பதையும் தெளிவாக அறிந்துவைத்திருக்கிறார் அதை அவரே ஒரு இடத்தில் இப்படி சொல்கிறார் ‘கனேசன் மாதிரியெல்லாம் எனக்கு வராது அதனால நான் என்ன செய்கிறேனோ அதை படம் எடுத்துக்க’.

2. நம்மைவீட மற்றவர்கள் யாரும் உயர்ந்தவர்கள் கிடையாது என்ற எண்ணம். நாடகம் பார்க்க பெரியார், அண்ணா போன்ற பெரியவர்கள் வந்திருக்காங்க என்று சொல்லும் போது பதட்டபடாமல் வரட்டுமே இப்ப என்ன அதுக்கு ‘என்னைவீட பெரியவங்களா நான் யாரையும் நினைத்துகூட பார்ப்பதில்லை’ என்று சொல்கிறார். சொல்வதோடு இல்லாமல் அதை பல இடங்களில் செய்தும் காட்டியிருக்கிறார். நாமாக இருந்தால் ஆங்கிலம் எனக்கு தெரியாது தமிழில் சொல்லுங்க என்று சொல்லுவோம் அதையே M.R.ராதா இப்படி சொல்கிறார் ‘நீங்க ஆங்கிலத்தில் பேசினா எனக்கு மட்டும்தான் புரியும் மற்றவர்களுக்கு புரியாது அதனால தமிழில் பேசுங்க’ அதுவும் தன்னை கைது செய்ய வந்திருக்கும் போலிஸிடம் பேசுவதையும், சிவாஜி இம்பால கார் கொடுக்க மறுக்கும்போது அதற்கு கோபப்படாமல் M.R.ராதா என்ன செய்தார் என்று படித்தீர்களானால் அவருடைய அளுமை உங்களுக்கு புரியும்.

புத்தகத்தை படிக்கும் போது ஒரு விசயம் நமக்கு புரிகிறது அந்தகாலத்தில் இருந்தவர்கள் ஒரு நேரடியான அனுகுமுறையை கையாண்டிருக்கிறார்கள். என்.எஸ்.கே மீது M.R.ராதா கோபம் கொள்வதும் அதை கேள்விப்பட்டு M.R.ராதா முன்பு வந்து நின்று சுடுடா என என்.எஸ்.கே கூறுவதாகட்டும். அண்ணாபற்றி விமர்சனம் செய்து அதை புத்தகமாக எழுதி அண்ணாவிடமே M.R.ராதா கொடுப்பதாகட்டும். எம்.ஜி.யாரைகூட ஆள்வைத்து சுடவில்லை தானே நேரடியாக சென்று சுட்டிருக்கிறார். பிரச்சனைகள் முடிந்த பிறகு மனோரமாவின் மகன் திருமணத்தில் எம்.ஜி.யாரிடம் சென்று என்ன ராமசந்திரா செளக்கியமா என M.R.ராதா விசாரிப்பதாகட்டும், சரியோ தவறோ அதை நேரடியாகவே செய்திருக்கிறார்கள் என்று படிக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. பல இடங்களில் தனக்கு சரியென பட்ட விசயத்தை சம்பந்தப்பட்டவர்களிடமே சென்று அவர்களை கிண்டல் செய்துள்ளார். உடல் நிலை சரியில்லாத பெரியாரிடம் பணம் கொடுத்து இப்போது உங்களுக்கு உடல் சரியாகிவிடும் என்று கூறுவதையும் ரங்காராவிடம் இவரு நல்லவரா நடிக்கிறவரு லேட்டா வராரு என்று சொல்வதையும் உதாரணமாக கூறலாம்.

M.R.ராதாவின் செயல்பாடுகள் சற்று முரட்டுத்தனமாக நமக்கு தோன்றினாலும் அவரைப்பொருத்தவரையில் அது சாதாரணமாக செயலாகவே இருந்திருக்கிறது. ஏனெனில் அவரது மனநிலை சிறுவயதிலிருந்தே அப்படித்தான் பக்குவப்பட்டிருக்கிறது. பல ஊர்களுக்கு தனியாக பயணம் செய்து, பல மனிதர்களிடம் வேலைபார்த்து அடிபட்டு, மிதிபட்டு மனிதர்களை படித்திருக்கிறார் இதனால் தன்னை தற்காத்துக்கொள்ள வேண்டியிருந்தாலும், கோபம் ஏற்படும்போதும் சம்பந்தப்பட்டவர்களை போட்டுத்தள்ளுவது என்றே சிந்திதிருக்கிறார். எம்.ஜியாருக்கு முன்பே பலபேரிடம் சுட்டுவிடுவேன் என்று கூறுவது, திருப்பதிக்கு குண்டு வைக்க முயற்சிப்பது என அவரது சிந்தனையே அப்படித்தான் இருந்துள்ளது. அதை பிரதிபலிக்கும் விதமாக எல்லாம் முடிந்து இறுதியாக இப்படி சொல்கிறார் ” குடும்பத்தில் சண்டை வருவதில்லையா, நன்பர்களுக்கிடையே சண்டை வருவதில்லையா அதுபோல்தான் இதுவும், இரண்டு நன்பர்கள் அடிச்சிகிட்டோம். கம்பிருந்தால் கம்புல அடிச்சிப்போம், கத்தியிருந்தா கத்தியில அடிச்சிப்போம், துப்பாக்கி இருந்தது துப்பாக்கில அடிச்சிக்கிட்டோம் அவ்வளவுதான்”.

M.R.ராதாவின் பிரச்சனையே அவர் ஒரே மாதிரியான சிந்தனையை கொண்டிருப்பதுதான். சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாத்தி பேசுவது, சக மனிதர்களைக் கண்டால் சஞ்சலமடைந்து சொன்னதை மாற்றி பேசுவது போன்ற விசயங்களெல்லாம் அவரிடம் கிடையாது. எல்லா சூழ்நிலையிலும் தன்னுடைய நிலையான சிந்தனையை வெளிப்படுத்தியிருக்கிறார். முதலில் கடவுள் இல்லைனு சொன்னாங்க, பிறகு அண்ணா ஒரே கடவுள் என்று சொன்னார் பெரியாரும் அதை ஒத்துக்கிட்டார் ஆனா அதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என தன்னுடைய தனித்தன்மையை வெளிப்படுத்துகிறார். சாதாரண தொண்டனாக இருந்தால் தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே என சென்றிறுப்பான்.

ஆசிரியர் எம்.ஜியாருக்கும் M.R.ராதாவிற்கு ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனையிலிருந்து எம்.ஜியாரை சுடும் வரை விறுவிறுப்பாக எழுதியுள்ளார். அந்த சமயத்தில் M.R.ராதாவின் பேச்சுக்கள் எப்படி தவறாக பொருள்கொள்ளப்பட்டது என்பதையும் விளக்கியிருப்பது சிறப்பு.

M.R.ராதாவிடம் நாம் அசந்து போகும் இரண்டு விசயங்கள் உண்டு. 1. உதவி கேட்டதற்காக உடல் நிலை சரியில்லாவிட்டாலும் காலில் ரத்தம் வடிய மேடையேறி நடித்து கொடுத்த பண்பு மற்றும் தன்னுடன் பணியாற்றுபவருகளிடம் அவர்காட்டும் பரிவு. 2.அரசாங்கமே எதிர்த்தாலும் தான் நினைத்ததை செய்து காட்டும் போரட்ட குணம்.

தற்போதுள்ள சினிமா நடிகைகளிடம் ஒரு கேள்வி அவ்வப்போது கேட்கப்படுவண்டு ‘உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?’ பதில் சொல்ல முடியாமல் ஒருவழியாக சமாளித்து அடுத்த கேள்விக்கு சென்று விடுவார்கள். யாராவது ஒரு நடிகரின் பெயரை சொல்லிவிட்டால் தன்னுடைய மார்கெட் பாதிக்கப்படுமோ என்ற எண்ணம். எந்த பிரச்சனையும் இல்லாத இந்த காலகட்டத்திலேயே இப்படி என்றால்… M.R.ராதாவின் இறுதி சடங்கில் சினிமா நடிகர்கள் சிலர் கலந்துகொண்டார்கள் என்று படிக்கும்போது அப்போதைய சூழ்நிலையை புரிந்துகொள்ள முடிகிறது.

ஒரு மிகச்சிறந்த ஆளுமை குணம் நிறைந்த ஒருவரைப்பற்றி படிக்க விரும்புபவர்கள் இந்த புத்தகத்தை நிச்சயம் படிக்க வேண்டும். இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க கீழே உள்ள முகவரிக்கு (URL) செல்லுங்கள்.

URL IS: http://nhm.in/shop/978-81-8368-636-5.html

No comments: